சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையின் சமீபத்திய சாதனை .
ஐம்பது வயதுடைய ஆடு மேய்க்கும் தொழிலாளி , ஜெயராமையா கடும் வயிற்று வலி யால் அவதிப்பட்டு ரத்த வாந்தி எடுத்து , ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .டாக்டர்கள் குழு பரிசோதித்ததில் அவருக்கு பெருந்தமனி வெடித்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
நீண்ட நேர அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவர் காப்பாற்றப் பட்டார் . இந்த அறுவைசிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் பத்து லட்சம் வரை செலவாகி இருக்கும். அரசு மருத்துவர்களின் திறமையும், மருத்துவ அறிவும் எவ்விதத்திலும் தனியார் துறைக்கு குறைந்ததல்ல .
இந்த பதிவை நான் எழுத காரணம் உண்டு.
மகள் ஸ்டேன்லி மருத்துவமனையில் முதுகலை மருத்துவம் படிக்கிறார். சில நேரங்களில் நபர்களின் கேலி பார்வைக்கும், பேச்சுக்கும் ஆளாவதுண்டு .
"என்னது அந்த கவர்மெண்ட் ஹாஸ்ப்பிடலா ? ரொம்ப அழுக்காக இருக்கும் இல்லே .? எப்படித்தான் அங்கு வேலை செய்யறியோ ?"
இவள் முதலில் மௌனமாக இருந்து பின் " ஒரு நாளுக்கு ஆயிரக் கணக்கில் நோயாளிகள் வந்து போகும் இடம். அரசு நிதியில் மட்டுமே எங்கள் செலவுகள் அடங்கும். " என்று விளக்குவார் .
"நோயாளிகள் கூட ரொம்ப அழுக்காக வருவாங்க இல்லே எப்படி செக் செய்யறியோ .? அந்த ஏரியா கூட ரொம்ப அழுக்கு " என அடுத்துப் பேசும் போதே அவர்கள் முகத்திலும், கண்களிலும் ஒவ்வாமை தெரியும் .
பொறுத்துப் போகவும் ஒரு எல்லை உண்டு இல்லையா ?
"ஆமாம் , அப்படித்தான் .எங்கள் ஹாஸ்பிடல் காரில் வந்து இறங்குபவர்களுக்கு அல்ல. வீடு கூட இல்லாமல் பிளாட் பார்மில் படுத்துறங்கி, அடுத்த வேலை உணவுக்காக உழைக்கும் ஏழை மக்களுக்கானது. அவர்களுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம் ,
அரசாங்கம் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் தாராளமாக தனியார் மருத்துவமனை செல்லட்டும் " என்று பொங்கி குமுறுவார் ,
ஆம் , அரசு மருத்துவமனைகள் இன்னும் இவர்களுக்காக இயங்கி கொண்டிருக்கின்றன .
அரசாங்கம் இவர்களுக்காகத்தான் .
நல்ல சேவைத் தரும் அரசுப் பள்ளிகளை , நிறுவனங்களை , மருத்துவமனைகளை துச்சமாக கருதுவோர் தயவு செய்து இந்தப் பதிவை படிக்கச் வேண்டாம் .