Monday, June 24, 2019

கருகும் இளந்தளிர்கள் 


இந்த வாரம் ஊடகங்களில்  துக்கம் சுமந்து வந்த செய்தி ஒன்று நம்மைக் கலங்க வைத்தது. நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து மதிப்பெண் குறைந்தது என்று இதுவரை மூன்று இளம் மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டு தம் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர் . அனைவரையும் நிலைகுலைய வைத்த இந்த தற்கொலைச் செய்திகள்  அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது .

நீட் (NEET National Eligibility and Entrance Examination ) எனப்படும் இத்தேர்வு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு. கடந்த  மூன்று ஆண்டுகளாக  இளநிலை மருத்துவம் , முது நிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர விரும்புபவர்கள் அனைவரும் எழுத வேண்டிய கட்டாயத் தேர்வு. தேசிய அளவில் நடத்தப்படுவதால்  அதிக கடினமாக இருப்பதாக ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் கருத்து. 

இந்த மருத்துவ சேர்க்கை மாநில அளவில் இருந்த போது ,+2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ,மருத்துவக் கனவுகள் கொண்ட மாணவர்கள் எளிதாக மருத்துவக்கல்லூரிகளில் இடம் பிடித்தனர் . கடின உழைப்பைக் கொடுத்த கிராமப்புற மாணவர்களும் மருத்துவர்கள் ஆனார்கள் . இதற்கும் முந்திய காலம்  ஒன்று இருந்தது .மருத்துவம், பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள் ,மாநில அளவில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டி இருந்தது . என்ற இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது . TNPCEE (Tamil Nadu Professional Courses Entrance Examination ) என்ற இந்த நுழைவுத்தேர்வு 100 மதிப்பெண் , +2 மதிப்பெண் உடன் சேர்ந்து ரேங்க்  போடப்படும் .   இதைத்தவிர சிபிஎஸ்சி AIPMT (All India Pre-Medical/Pre-Dental Entrance ) ஒரு நுழைவுத் தேர்வையும்  நடத்தி  வந்தது . தனியார் கல்லூரிகள் தங்கள் பங்குக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தன. 

2006 வரை இருந்த இந்த முறை மக்களின் எதிர்ப்பைப் பெற்றது . கிராமப்புற மாணவர்கள்+2 வில் சிறப்பான மதிப்பெண் பெற்று இருந்தாலும் , இந்த மாநில நுழைவுத் தேர்வில் மதிப்பெண் குறைய அவர்கள் மருத்துவராகும் வாய்ப்புகள் குறைந்தன. நகர்ப்புற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற கோச்சிங் வகுப்புகளில் சேர , அவற்றை நடத்தும் நிலையங்கள் பணத்தைக் கொள்ளையடித்தன . இந்நிலையில் பா .ம.கா தலைவர் ராமதாஸ் போராட்டங்கள்  நடத்தியும் , வழக்கு நடத்தியும் இந்த நுழைவுத் தேர்வு 2006 ஆண்டு முதல் ரத்தானது . +2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டும் முறை நடைமுறைக்கு வந்தது .

இப்போது 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு , மாணவர்களை பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கி உள்ளது. மிக கடின உழைப்பை கொடுத்துதான் மாணவர்கள் +2 வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் . மீண்டும் ஒரு நுழைவுத் தேர்வு , அதுவும் சிபிஎஸ்சி தரத்தில் நடத்தும் இந்த தேர்வு துவங்கியதில் இருந்து பல குளறுபடிகள் , கெடுபிடிகள் .

முதலில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி யில் மட்டுமே விடை தரலாம்  என்று இருந்த இந்த தேர்வு இப்போது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என்ற  விதி தளர்வு மட்டுமே உள்ளது. மற்றபடி இந்த தேர்வு தரும் அழுத்தங்கள் அப்படியே உள்ளது. 180 கேள்விகள் , ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் .தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது . 720 மதிப்பெண்ணுக்கு இவ்ரகள் எழுத வேண்டி உள்ளது . இந்த ஆண்டு முதன்முறையாகத் தேசிய தேர்வாணைய முகமை (National Testing Agency) நடத்தியது. நாடு முழுவதும் 14.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்..

இந்த தேர்வு ஆரம்பித்த போது முதல் பலி   அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த அனிதா. இவர்  பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தவர் . சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில்  700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.அனிதாவின் மரணம் தமிழ் மண்ணில் பேரிடியாக இருந்தது .பொது மக்கள், மாணவர்கள், எதிர் கட்சிகள் எல்லோருமே இந்த தேர்வுக்கு தடை விதிக்க போராடினார்கள்.

வழக்குகள் போடப்பட்டன . ஆனால் நீட் புறந்தள்ள முடியாத சுமையாக மாணவர்கள் தலையில் வைக்கப்பட்டுள்ளது .முதுநிலை மருத்துவம் படிக்க விரும்பும் மருத்துவர்களும் இதன் பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை . 

ஒவ்வொரு ஆண்டும், தற்கொலைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது . இந்த ஆண்டு முடிவு வெளிவந்த அன்றே மதிப்பெண் குறைந்ததற்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதே காரணத்துக்காக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால்  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு உயிர்ப் பலிகளை காவு வாங்கும் இந்த நுழைவுத் தேர்வு , கோச்சிங் சென்டர்களின் முதலாளிகளை கொழிக்க வைத்து அவர்களின்  பேராசைக்குத் தீனி போடுகிறது . இந்த தேர்வின் நேர்மறை , எதிர்மறை விளைவுகளை சீர்தூக்கி , இந்த தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். மாநிலங்கள் அதிகாரத்தில்  , மருத்துவ சேர்க்கை  பொறுப்பைத்  தர வேண்டும் 

தொடரும் தற்கொலைகள் பெரும் கவலையைத் தருகிறது . பெற்றோர் , ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவப்படிப்பு என்பது ஒரு இலக்குதான். அதை அடைய இயலவில்லை என்றால் எல்லாமே முடிந்துப் போவதில்லை   என்று இளந் தலைமுறைக்குப் புரிய வைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட வாழ்க்கை பெரிது என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் , வலைத்தளங்கள் , ஊடகங்கள்  ஒன்று சேர்ந்து இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட வேண்டும். இது உடனடியாக செய்ய வேண்டிய சமூகக் கடமை, அவசியம் மட்டுமல்ல , அவசரமும் கூட . 


இந்த வார விகடகவி இணைய இதழில் என் கட்டுரை 




பாரெங்கும் பரவும் தேமதுர தமிழ் 

மரியா சிவானந்தம்



  அறிவியலும் தொழிற்நுட்பமும் வளர்ந்துவரும் காலம் இது கடந்த இருபதாண்டுகளில்  . இணையவளர்ச்சி அபரிமிதமாக , உலகமே ஒரு கிராமமாக சுருங்கி, சுட்டு விரலில் உலகைக் கட்டியாளும் காலம் அல்லவா இது

 " தேமதுர தமிழோசை உலகமெல்லாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று ,உலகம முழுதும் தமிழ் மொழியின் எழிலை , தொனமையை , தமிழ் கூறும் அறங்களைப் பரப்ப கனவு கண்ட   பாரதியின் எண்ணங்களை   இலகுவாக ,இயல்பாக நிறைவேற்ற உகந்த தருணம் இதுவே .

மியன்மரில் இத்தகைய தமிழ் பரப்புப் பணியை"திக்கெட்டும்  தமிழ் முழக்கம் செய்வோம்  " என்று இலக்கோடு செயலாற்றி வரும் முனைவர் .இரா .குறிஞ்சிவேந்தன் அவர்களைப்பற்றி கேள்விப்பட்டு , அவரின் பணியைப்  பற்றி அறிய ''விகடகவி'க்காக தொடர்பு கொண்டோம் . பிஜு தீவுகளிலிருந்து திரும்பிய அய்யா அவர்கள் நமக்கு  நேரம் ஒதுக்கி  அரிய தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

தஞ்சை    தமிழ்பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையின் துறைத்தலைவர் மற்றும் தமிழ் பேராசிரியாக  இருக்கும் முனைவர் அவர்கள் அரசின் நிதி உதவியுடன் , தமிழக அரசின் ஒப்புதலுடன் இந்த தமிழ்ப் பரப்பு பணியைச் செய்துவருகிறர் . இதற்கான வித்து இவர் 2011-2012 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி அரசுக்கு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்த போது , ஒரு குறும்படத் தயாரிப்புக்காக மியன்மர் சென்ற போது இவர் மனதில் விழுந்தது. 

அங்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் , முறையான தமிழ்க் கல்வி பயிற்றுவிக்க பள்ளிகளோ ,ஆசிரியர்களோ என்பதைக் கண்டார். .விடுமுறை நாட்களில் ,கோவில்களில் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்படுவதை க் கண்டார். 'கோவில் தலமனைத்தும் பள்ளி செய்குவோம் ' என்ற புதிய யுக்தி அவரைக் கவர்ந்தாலும் ,தம் சொந்த செலவில் எல் சி.டி ப்ரொஜெக்டர் போன்ற உதவிகளை செய்த போதும்  முறையாக தமிழ் கற்பிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தது அவர் தமிழ் மனம் . 

தமிழ் பிழைப்புக்கான மொழி மட்டும் அல்ல , வாழும் நெறிகளை கற்றுத்தரும் செம்மொழி. தமிழின் எண்ணற்ற இலக்கியங்கள் , அறம் கூறும் நூல்கள் இவை தமிழகம் தாண்டி , தமிழர்கள் வாழும்  நாடுகளை  எல்லாம் சென்றடைய  வேண்டும் என்ற அவர் வேட்கை , ஒரு திட்ட வரைவை உருவாக்கியது. அதன்படி , பிற நாடுகளில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் வேண்டும், தமிழ் இலக்கியம், இலக்கணம் இவற்றுடன் இம்மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, இசை , கலைகள் அனைத்தையும் கடல் கடந்து எடுத்துச் சென்று சேர்ப்பிக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த திட்ட வரைவைத்  தயாரித்தார் . 

இந்த திட்டம் , தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வழியாக தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டு , அங்கு  பரிந்துரைக்கப்பட்டு தமிழக  முதல்வரின் நேரடி பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட , உடனே அரசின் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . அரசின் நிதி ஒதுக்கீடும் கிடைக்க , முனைவர் அவர்கள் செயலாற்ற துவங்கினார் . 

அத்திட்டத்தின்படி , இந்த உயரிய பணிக்குப் பொருத்தமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.நாட்டுப்புறகலைஞர்கள் அழைப்பட்டார்கள் . மியான்மரில் இப்பணி துவக்க,பயண ஏற்பாடுகள் உட்பட்ட  எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது . ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு சாராருக்கும் தனித்தனி பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டது . பல கலந்தாலோசனைகள் மேற்கோள்ளப்பட்டன , பர்மாவின் தமிழ் வளர்ச்சி மையமும் , அயல் நாட்டு கல்வித்துறையும் உதவிக்கரம் நீட்டின  

100 ஆசிரியர்கள் என இலக்கு நிர்ணயிக்க 147 ஆசிரியர்கள் பயிற்சிக்கு வந்தனர் . தமிழ், இலக்கியங்கள், இலக்கணம் , மொழி உருவான விதம் அறநெறி சார்ந்த பயிற்சிகள் , மெய்யியல் ,தத்துவம் , உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு தமிழ் இலக்கியம் சார்ந்த தீர்வுகள் என்று ஒரு புதிய பாட திட்டத்துடன் சார்ந்த ப்யிற்சி இவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தொடர் பயிற்சிக்கு கையேடுகள் , புத்தகங்கள் வழங்கப்பட்டன . பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது .

மாணவர்களுக்குத் தனி பயிற்சி தரப்பட்டது . எந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும் இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றில் இருந்து அறநெறிகள் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டன . இக்காலத்தில் உருவாகியுள்ள பன்னாட்டு சமூக சூழலில் (International Society ) இளைய சமூகம் சந்திக்கும் சவால்களை மனதில் கொண்டு  இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது .வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தரும் நூல்களின் நயமும் , தமிழ் பண்பாட்டின் ஆழ்ந்த பேருண்மைகளும் , அவர்தம் மனதில் பதியுமாறு பயிற்சி தொடர்ந்தது . 50 மாணவர்கள் என இலக்கு வைக்க ,  85 மாணவர்கள் பயிற்சி  பெற்றனர் .

பதினைந்து நாட்கள் , ஒரு நாளுக்கு எட்டு வகுப்புகள்  என நடைபெற்றது .தமிழிசை நிகழ்த்தும் மாயங்களை அனுபவிக்க இசைப் பயிற்சி .கரகாட்டம் , ஒயிலாட்டம் , தேவராட்டம் என நாட்டுப்புறக் கலைகள் களை  கட்டின . கும்மி, கோலாட்டம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக பயிற்றுவிக்கப்பட்டது .யோகா போன்ற உடல், மன எழுச்சி வகுப்புகள் நடத்தப்பட்டன .இலக்கிய கதைகள் புராண கதைகள் வழியாக வாழ்க்கை நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டன  கருத்தரங்குகள்,கலந்தாலோசனைகள் , மாணவர் ,ஆசிரியரின் பின்னூட்டங்கள் என பயிற்சி அரங்கு முழுமையாய் நிறைந்தது 

             பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி , மார்ச் மாதம் 3 ஆம் தேதி இந்த பயிற்சி வகுப்புகள் முடிந்தன .  பர்மிய மண்ணில் தூவிய இவ்விதைகள் , நூறு மடங்கு பலன் தரும் என்று நம்புகிறார் முனைவர் குறிஞ்சிவேந்தன் அவர்களுக்கு ஊட்டிய தமிழின் சுவையும் , இனிமையும் அவர்கள் நெஞ்சில் என்றும் நிலைத்து , நெடுங்கால பயன்களை தரும் என்று பூரணமாக நம்புகிறரர் . 


பர்மாவுடன் இவரின் இந்த மாபெரும் பணி முடிவடையவில்லை. அடுத்து பிஜி தீவுகள் , தென்னாப்பிரிக்கா என்று தொடர்ந்துக் கொண்டே இருக்க திட்டமும், களப்பணியாளர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள் . இந்த நேரடி பயிற்சிகள் தவிர புலம் பெயர்ந்த அயல்நாட்டு தமிழருக்கும், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்க்கும் இணைய வழி தமிழ் வகுப்புகளைத் துவங்க இருக்கிறார் . ஆன்லைன் பாடங்கள் , உரிய ஆசிரியர்கள் வழியாக 24 மணி நேரமும் தொடர்ந்து கற்பிக்கப்படும் . பதிவு செய்து தேர்வு பெறுவோர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் இளங்கலை , முதுகலை பட்டங்களைப் பெறலாம் .

மேலும் அவர் தொடர்கையில் ,"வாழ்வில் எழும் சிக்கல்களுக்கு , மனச்  சோர்வுகளுக்கு , துன்பங்களுக்கு  தமிழ் இலக்கியங்கள் தம்முள் பதிலைப் பொதித்து வைத்துள்ளன . நன்னெறி படுத்தவும் ,நல்லறங்களைக்  கற்பிக்கவும்  தமிழால் முடியும். மாறி வரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வதும் தொழிற்நுட்பங்களை வசப்படுத்திக் கொண்டு தமிழை வளர்ப்பதும் காலத்தின் கட்டாயம் .அரசின் ஆதரவு தொடர மேலும் சாதிக்க இயலும்,முதல்வர், அமைச்சர் பாண்டிய ராஜன் அவர்களுக்கு நன்றி "   என்றார் 

பேட்டி முடிய இருக்கும் இறுதி மணித்துளிகளில் , "சில இலக்கிய காட்சிகளை , சிலம்பின் அடைக்கலக்  காட்சி போன்ற  இடங்களை விவரிக்கும் போது , நிறைய பேர் கண்ணீர் விட்டு அழுதார்கள் " என்றார் . உண்மைதான் . மனித உள்ளத்தின் கசடுகளை நீக்குவதும் , இறுகிய இதயத்தை இலகுவாக்குவதும் மொழியின் வேலை ,  தமிழின் தேவை இந்த புள்ளியில் தான் துவங்குகிறது அல்லவா ? 

'விகடகவி ' சார்பாக நன்றி கூறி அவர்தம் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தி     விடை பெற்றோம்.
 .

வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார் (பாரதி )



இனம், மொழி கடந்து என்றும் , எங்கும் தமிழ் வெல்லும்.! 

பாரெங்கும் பரவட்டும் தேமதுர தமிழோசை  . !!

விகடகவி வெளியீடு 

 







 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...