இளம் சாதனையாளன் இஷான்
மரியா சிவானந்தம்
குழந்தை வளர்ப்பு தனிப் பெரும் கலை .
சின்னஞ்சிறு சிசுவாக பிறக்கும் குழந்தை , தாய் மடி தவழ்ந்து, குப்புற கவிழ்ந்து, நகர்ந்து , மென்பாதம் நோக சிற்றடி எடுத்து வைக்கும். மழலையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையும் இயற்கை நிகழ்த்தும் அற்புதமான அழகு .
பிறந்த குழந்தையை நான்கு வயது வரை வளர்ப்பது என்பது சவாலான சங்கதி. குளிக்க வைப்பது, உடை மாற்றுவது உணவு ஊட்டுவது, மருந்து தருவது நல்ல வழக்கங்களை ஏற்படுத்துவது, உறங்க வைப்பது எல்லாமே எந்த பள்ளியும் , கல்லூரியும் கற்றுத் தர முடியாத கலைகள். குழந்தை பள்ளியில் சேர்க்கும் முன்பே தானே உண்ணவும், தன் தேவைகளைச் சொல்லக்கூடிய நிலை வரும் வரை அக்குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியோர்கள் தவித்துப் போகிறார்கள் .
இக்கால குழந்தை வளர்ப்பில் அனைவரும் பெரிதும் நம்பும் துணை மொபைல் போன் தான் .ஒரு சில மாதங்களே ஆன குழந்தைக்கே மொபைல் உதவியால் உணவூட்டுவது, குளிப்பாட்டுவது ,உறங்க வைப்பது வழக்கமாகி விட்டது. குறிப்பாக குழந்தை அழுது, அடம் பிடிக்கும் போது சமாதானப்படுத்த மொபைலையே நாட வேண்டி உள்ளது.. பெரியவர்களை விட இளைய தலைமுறையும் ,இளைய தலைமுறையை விட சின்னஞ்சிறார்களே மொபைலுக்கு அதிகமாக அடிமைப்பட்டு இருப்பது நாம் எல்லா வீடுகளிலும் பரவலாக காண முடிகிறது.
இந்த வழக்கத்துக்கு மாறாக தன் குழந்தையை ,மொபைலின் பிடியில் சிக்க விடாமல் வித்தியாசமாக சிந்தித்த பெற்றோர் பிரசன்னா மற்றும் டாக்டர். லாவண்யா. வேலூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் தம் மகன் இஷான் ரயனை மொபைல் இன்றி வளர்க்க நினைத்தனர் அதன்படியே குழந்தையின் ஒவ்வொரு நிலையிலும் கவனித்து வளர்த்தனர். இருவருக்கும் உறுதுணையாக இருந்தது லாவண்யாவின் அம்மா ,அப்பா ரீட்டா மற்றும் சீதாராமன் அவர்கள் கூட்டுகுடும்பங்கள் சிதைந்து வரும் நிலையில் தாத்தா பாட்டியின் கவனிப்பைப் பெற்ற குழந்தைகள் . வரம் பெற்றவர்கள். பிறந்தது முதல் இவர்களது சிறப்பான வளர்ப்பில் ,இஷான் மொபைல் மற்றும் தொலைக் காட்சிகளின் பாதிப்பு இன்றி வளர்ந்து வருகிறான் .
இப்போது ஒரு வயதும், ஒன்பது மாதமும் நிறைந்த இஷான், மொபைல் , டேப் போன்ற உபகரணங்கள் எதுவும் இல்லாமலேயே வளர்க்கப்படுகிறான் . குழந்தை உற்று கவனிக்கத் தொடங்கிய பருவத்திலியே அவனுடன் செலவழிக்கும் நேரத்தை திட்டமிட்டு, அவனுக்கு கற்பிக்க தொடங்கினர். சின்ன சின்ன சொற்கள், அசைவுகள், பாடல்கள், ரைம்ஸ் என்று கற்பித்தனர் இஷானும் சமர்த்தாக கற்றுக் கொண்டான். பட அட்டைகள் (Flash Cards). கரும்பலகை வழியாக விலங்குகள், பறவைகள், நிறங்கள், எழுத்துக்கள், எண்கள், உருவங்கள் போன்றவற்றை கற்றுக் கொண்டான்
இப்போது இஷானால் 205 பொருட்களை இந்த சிறு வயதில் அவனால் அடையாளம் காட்ட முடியும் .26 விலங்குகள் ,15 பறவைகள் , 10 பூக்கள், 25 பழங்கள் , 20 காய்கறிகள் 11 வண்ணங்கள் , 7 உருவங்கள் 20 வாகனங்கள் 10 உடலின் பாகங்கள் , 26 ஆங்கில எழுத்துக்கள் , 20 வரை எண்கள், 15 புதிய சொற்கள் இவற்றை அடையாளம் காட்ட முடியும். பெற்றோருடன் தாத்தா பாட்டியும் கற்றுக் கொடுத்ததால் , இஷான் வெகு விரைவாக ஆர்வத்துடன் கற்றுக் கொண்டான். இந்த வயதில் இது ஒரு சாதனை .
இளம் சாதனையாளர்களின் சாதனைகளைப் பதிவு செய்து, ஊக்குவிக்கும் தனியார் நிறுவனமான கலாம் வேர்ல்ட் ரெகார்ட்ஸ், இஷானின் இந்த சாதனையை அங்கீகரித்து அவனை பாராட்டியது . சிறுவர்களின் யோகா, நீச்சல் போன்ற சாதனைகளுடன் .கற்றல் சம்பந்தமான சாதனைகளையும் இந்த நிறுவனம் அங்கீகரித்து வருகிறது . சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விழாவில் இஷானுக்கு பாராட்டுப் பத்திரமும், தங்க மெடலும் அப்துல் கலாமின் உருவச் சிலையையும் நினைவுப் பரிசுகளாக வழங்கியது . .(Amazing Memory Power Grasping Genius Kid ) என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கியது
இரண்டாண்டு நிறையும் முன்பே பல பொருட்களை அடையாளம் காட்டவும் , சொற்களுக்கு பதில் சொல்லவும் கற்றுக் கொண்டுள்ளான். குழந்தமை மாறாமல், அதே நேரத்தில் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறான் இந்த இளம் மேதை. இஷான் பிறந்த சில மணி நேரத்தில் இருந்தே முழு நேரமும் அவனை வளர்த்து வரும் 'அம்மம்மா' ரீட்டா அவர்களுக்கு இந்த கற்பித்தலில் பெரும் பங்கு உண்டு.
ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு தனி மனிதனின் வளர்ச்சிமட்டுமல்ல அது சமூகத்தின் வளர்ச்சி. எனவே, . பெற்றோர் அறிவுபூர்வமாக, உணர்வு பூர்வமாக குழந்தைகளை நெருங்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். சமூகத்துக்கும், வீட்டுக்கும் பயனுள்ள ஒழுக்கமும், திறமையும் கொண்ட சிறந்த குடிமக்களாக அவர்களை வளர்க்கும் பொறுப்பு நமக்கு உண்டு.
மொபைல் என்னும் நவீன ஆக்டொபஸ் இளம் சிறுவர்களை வளைத்து, அவர்களின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளைக் குறைத்து, கண்ணுக்கும், உடலுக்கும், மனதுக்கும் கேடு விளைப்பதை நம் கண்ணால் காண்கிறோம். மொபைலும், தொலைக்காட்சியும் குழந்தை வளர்ப்பில் நன்மையை விட தீமைகளையே அதிகமாக செய்வதாக நான் கருதுகிறேன். இந்நிலையில் மொபைல் இல்லாத குழந்தை வளர்ப்பு ஒரு முக்கியமான , பாராட்டுக்குரிய செய்தியாகும்.
குனிந்த தலை நிமிராமல், மொபைலில் கவிழ்ந்துக் கிடைக்கும் சிறுவர் சிறுமியரைப் பார்க்கும் போது மனதில் இனம் புரியா பயமும், கவலையும் பிறக்கிறது. அவர்கள் பார்க்கும் காணொளிகள், படங்கள், பாடல்கள் அவர்களுக்கு நல்லதைக் கற்பிக்கா விட்டாலும், வன்முறையை, ஆபாசத்தை வயதுக்கு ஒவ்வாத சங்கதிகளைக் காட்டுகிறதோ என்று அச்சமாக இருக்கிறது. குழந்தைகளை மொபைலின் பிடியில் இருந்து காக்க இங்கு ஒரு இயக்கமே நடத்த வேண்டும்.
பயிற்சியும் ,முயற்சியும் இளம் மேதைகளை உருவாக்கும் . நாளை அவர்களே அறிஞர்களாக உருவாக இந்த சிறுவயது பயிற்சிகள் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை .அதிக அழுத்தத்துக்கு உட்படுத்தாமல், விளையாட்டு போலவே இஷானுக்கு கற்பித்த பெற்றோரும் , தாத்தா பாட்டியும் பாராட்டுக்கு உரியவர்கள். அவன் வளர்ச்சியில் உறவினர்கள், அனைவரும் பெருமை கொள்கிறார்கள், குறிப்பாக இந்த கட்டுரையை எழுதும் பேறு பெற்ற அவன் தந்தை வழி பாட்டியாகிய நானும்.
நீடு வாழ்க இஷான் ரயன் !
.