Friday, February 16, 2024

 மூடு விழா காணும் திரையரங்குகள் 

மரியா சிவானந்தம் 


திரையரங்குகள் நம்  வாழ்வில்  பின்னிப் பிணைந்த இடங்கள்..

தன் ஆதர்ச  கதாநாயகனின் திரைப்படத்தை FDFS பார்க்கும் ரசிகருக்கும் சரி, அவ்வப்போது பொழுதுபோக்காக படம் பார்க்க போகும் ரசிகருக்கும் சரி , திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக  பார்த்து தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் ரசிகருக்கும் சரி, தியேட்டர்கள்  ஒரு முழுமையான பொழுது போக்கு இடமாகவே இருக்கிறது. ஒரு நூறாண்டுக்கும் மேலாக நம் மாநிலத்தின் கலாச்சார அடையாளமாக இருக்கும் இந்த இடங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக  விளங்குகிறது .

சென்னை அசோக் நகரின் ஒரு அடையாளமாக விளங்கும் உதயம் திரையரங்கு  இப்போது இடிக்கப்பட இருக்கிறது  என்ற துயரச்  செய்தி  சினிமா ரசிகர்களுக்கு பெரும் சோகத்தைத் தந்துள்ளது.    1981 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த தியேட்டரில் முதல் படமாக ரஜினியின் சிவப்பு மனிதன் திரையிடப்பட்டது. தொடர்ந்து  பல வெற்றிப்படங்கள் இங்கு வெளியாகி உள்ளது. 

உதயம், மினி உதயம்,சூரியன் , சந்திரன் ஆகிய நான்கு தியேட்டர்கள் இங்கு உண்டு. சினிமா ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான, வசதிகள் மிக்க திரை அரங்காக உதயம் தியேட்டர் இருந்து வந்துள்ளது.  இந்த  திரை அரங்கத்தில் நண்பர்களுடன் ஆரவாரமாக பார்த்த நினைவுகளை ,  கடைசி வரிசையின் ஓர இருக்கைகளில் காதலியுடன் படம் பார்த்த அனுபவத்தை , குடும்பத்துடன் குதூகலித்து    படம்  பார்த்த நெகிழ்ச்சியான அனுபவங்களை, மக்கள் பெருமூச்சுடன் இணையத்தில்  பகிர்ந்துக் கொள்கிறார்கள் . 

திரை அரங்குகளை மூடி வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நேற்றல்ல சில ஆண்டுகளாகவே தமிழக நகரங்களில் தொடங்கி விட்டது .  நம் உணர்வுடன் கலந்த ஒரு இடமாகவே திரை அரங்குகள் இருந்து வந்தன. நம் இளமைக்கால நினைவுகளில் அது ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருந்தது .

கிராமங்களில், நகரத்தின் புறநகர் பகுதிகளில்  டூரிங் டாக்கீஸ்கள் இயங்கி வந்த காலத்தை நம்மில் பலர் மறந்திருக்க மாட்டோம். மாலை ஆனதும்  கேபி சுந்தராம்பாள் அல்லது டிஎம்எஸ்  பாடும் பக்தி பாடல் ஒலிபெருக்கியில்  முழங்க, வயலில் வேலை செய்து களைத்த  ஆண்களும் ,பெண்களும் தம்மை சீர்படுத்திக் கொண்டு டூரிங் டாக்கீஸ் செல்வார்கள் . மணல் குவித்து படம் பார்க்கும்  தரை டிக்கெட் நாலணா என்றால் சேர் ஒரு ரூபாய். இருக்கைகளின் இடம் மட்டுமே மாறுமே தவிர இது அடிப்படையில் சமத்துவம் நிலவும் இடம் 

 இந்த டாக்கீஸ்களில் . எம்ஜியாரின் மதுரை வீரன் சிவாஜியின் பாசமலர், ரவிச்சந்திரனின் காதலிக்க நேரமில்லை", ஜெய்சங்கரின், 'குழந்தையும் தெய்வமும்'  என்று எந்த படமானாலும்  இங்கு ஒரே வித வரவேற்பைப் பெறும். இருப்பினும் 'வாத்தியார்' படத்துக்கு தனி மவுசு உண்டு.  எம்ஜியார் திரையில் தோன்றும் போதே விசில் பறக்கும் .துண்டு லாட்டரி சீட்டுகள் திரையை நோக்கி வீசப்படும் . கற்பூர ஆரத்தி கூட உண்டு .

"டெண்ட் கொட்டகை"கள் காலம் ஒருநாள் முடிவுக்கு வந்தது. அவற்றை மூடியதில்  டி .வி க்கு  பெரும் பங்கு உண்டு. தொடர்ந்து,  சில ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் லாபத்துடன் இயங்கி வந்த பெரிய தியேட்டர்கள் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்கள் ,பெரிய ஹோட்டல்களை கட்டுவதைக் காண்கிறோம். திரைப்படத்தொழில்  நலிவடையாத நிலையில் , திரைப்படங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் நிலையில் மாற்றம் இல்லாத போது, தியேட்டர்கள் இடிக்கப்பட்டு உருமாற்றம் கொள்கின்றன. 

சென்னையில் அரை நூற்றாண்டைக் கடந்த பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு , வேறு பிரம்மாண்ட கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டு வருகிறது.காமதேனு , கிருஷ்ணவேணி , மினர்வா ,அலங்கார் , பிரபாத், மகாலட்சுமி , கெயிட்டி , வெலிங்டன் ,ராக்சி , சயானி ,மேகலா, கேசினோ ,ராக்கி ,சபையர் ,ஆனந்த் , ராஜகுமாரி  தியேட்டர்   போன்ற சென்னையின்  வாய்ந்த திரை அரங்குகள் இன்று இல்லை இந்த அரங்குகள்  இருந்த இடங்கள் எல்லாம் அந்த அந்த பகுதிகளின் நிலக் குறியீடுகளாக இருந்தன. சமீப காலங்களில் நாகேஷ் தியேட்டர்  விற்கப்பட்டு அங்கு திருமண மண்டபம் எழுந்தது .

ஒரு நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வந்த  கோவையின் டிலைட் திரையரங்கு இப்போது இடிக்கப்பட இருக்கிறது .1914 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அரங்கு , தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரை அரங்கு . இன்று கோவை வாசிகள் இந்த அரங்கம் இடிபடுவது கண்டு கண்ணீர் சிந்துகின்றனர் 

.மதுரையின் முதல் திரை அரங்கான இம்பீரியல் அரங்கு வர்த்தக வளாகமாக  மாறி விட்டது .ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் 'தங்கம் தியேட்டர் ' இருந்த இடத்தில் இப்போது நிற்பது சென்னை சில்க்ஸ் . மேலும் நடனா ,நாட்டியா நர்த்தனா , சிந்தாமணி போன்ற திரை அரங்குகள் சிதைக்கப்பட்டு, அங்கெல்லாம் வேறு பல வளாகங்கள் எழுந்துள்ளன . இது போலவே ஒவ்வொரு ஊரிலும் புகழ் பெற்ற திரை அரங்குகள் பல இடிக்கப்பட்டு அங்கெல்லாம் ஹோட்டல்கள் ,கோடௌன்கள் , மால்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன . 

வேலூரில் 'பராசக்தி 'படத்தை எடுத்த பெருமாள் முதலியாரின் நேஷனல் தியேட்டர் விற்கப்பட்டு அங்கு ஹோட்டல் வந்துள்ளது . ராஜா ,தாஜ் போன்ற நூறாண்டு வரலாறு கொண்ட தியேட்டர்களும் இன்று இல்லை .

தமிழகத்தின் முக்கிய நகரங்களில்  !இந்த மூடு விழா கதைகள் தொடர்கதையாகி விட்டது .

ஒரு காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு தேவைகளைப் பூர்த்தி செய்த திரை அரங்குகளில், ரசிகர்கள் கூட்டம் குறைந்த போது பராமரிக்கவே பணம் போதாமல் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டனர் என்பது நிதர்சனம் .முதலில் டிவி , விசிடி என்று வீட்டில்  படம் பார்க்க தொடங்கியதும், இணைய பயன்பாடு அதிகரித்த பின்பு யூட்யூப்  ,   OTT சேனல்களில் படம் பார்க்க தொடங்கியதால் இப்போது தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வருகிறது . 

மணி அடித்ததும் ,அரங்கில் விளக்குகள்  அணைக்கப்படும் . பெரிய வெள்ளித்திரை ஒளி விட  திரைப்படம் தொடங்கும் . படத்தின் கதையில் ,பாடலில், நடனத்தில் மெய் மறந்து மக்கள் தங்கள் கவலைகளை மறந்து ,தம்மை மறந்து ஆழ்ந்து விடுவார்கள். அந்த மூன்று மணி நேரத்தில் கனவும்,நிஜமும் ,கற்பனையும் கலந்த ஒரு மாய உலகில் உலா வருவார்கள் .அந்த அனுபவத்தை நம் வீட்டு தொலைக்காட்சியில் அனுபவிக்க இயலாது .

நம் சுக துக்கங்களில் பங்கு கொண்டு  நம் உணர்வுகளை உள்  வாங்கும் நிலமாக  இருந்த திரை அரங்குகள் புது வடிவம் பெற வேண்டும்.இப்போது இயங்கும் திரை அரங்குகள்  இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு நம் மக்களுக்கு தரமான பொழுது போக்கைத் தர வேண்டும் /




No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...