Friday, February 2, 2024

 சாகச நினைவுகள் - சர்க்கஸ்

மரியா சிவானந்தம் 


சென்ற ஞாயிறு அன்று ஒரு வித்தியாசமான  நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம் .

"Thrilling Thillanaa, A Circus carnival ' என்று விளம்பரப்படுத்தப்பட்ட  அந்த   பேனரை பார்த்ததும், "சர்க்கஸா , இப்போ ஏது  சர்க்கஸ் ?எங்கேயும் சர்க்கஸ் நடத்துற மாதிரியே தெரியலயே?" என்ற ஆச்சர்யத்துடன்  அந்த நிகழ்ச்சிக்கு  டிக்கட் புக் செய்தோம் .   பொழுதுபோக்கு  வசதிகள் குறைந்த சேலம் நகரில்  அந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோதியது.

உண்மையில் அது ஒரு மேஜிக் ஷோ . இரண்டு மேஜிக் நிபுணர்கள் (தொலைக்காட்சி புகழ்?) அற்புதமாக மேஜிக் செய்தார்கள். தொடர்ந்து கோமாளி வேடமிட்ட இருவர்  வேடிக்கை காட்டி  சாகசம் செய்து சிரிப்பு மூட்டினர். சீன இசை முழங்க, ஒரு சிங்கம் வந்தது .உண்மையில் அது இரண்டு ஆண்கள் . மஞ்சள் நிறத்தில் துணியால் தைக்கப்பட்ட சிங்க உடையைப் போட்டுக் கொண்டு வளைய வந்தனர் .

குழந்தைகள் மிகவும் ரசித்து சிரித்தனர் . விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு ஒரே ஆர்ப்பாட்டம் செய்தனர் .  அந்த நிகழ்ச்சிக்கு 'மேஜிக் ஷோ 'என்றே பெயர் வைத்திருக்கலாம் . சர்க்கஸ் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று மனதில்  ஓடிக் கொண்டே இருந்தது .நிஜ சர்க்கஸை இந்தக்காலத்து குழந்தை பார்க்க வாய்ப்பில்லையே என்ற ஆதங்கம் எழுந்தது .

இளமையில் சர்க்கஸ் பார்த்த நினைவுகள் மனதில் எழுந்தன. இப்போது மிருகவதை என்று தடை செய்யப்பட்ட அந்நாளைய சர்க்கஸில் நூற்றுக்கு மேற்பட்ட மிருகங்கள் அதே எண்ணிக்கையில் சர்க்கஸ் கலைஞர்கள் பங்கு  பெறும் மாபெரும் நிகழ்வாக அல்லவா இருந்தது? 

சர்க்கஸ் கூடாரம் ஒரு சிறிய கிராமம் அளவுக்கு இருக்கும். கூடாரம் அடிக்க தொடங்கும் போதே  ஊர்மக்களை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். சர்க்கஸ் நாற்பது நாட்கள் நடக்கும். சர்க்கஸ் நடக்கும் இரவுகளில்  கூடார உச்சியில்  மேல் இருந்து சக்தி வாய்ந்த சுழல் விளக்கு(Beam light) ஒன்று பொருத்தப்பட்டு அதன் வெளிச்சம் சில மைல்களுக்கு தெரியும் .அதைப் பார்த்து மக்கள் மிக அருகில் சர்க்கஸ் நடப்பதை அறிந்துக் கொள்வர் .

சர்க்கஸின் பிரம்மாண்டம்  அதில் உள்ள மிருகங்களை வைத்தே அறியப்படும். விலங்குகள்    செய்யும் சாகசங்களை வைத்தே விளம்பரப்படுத்தப்படும் . சிங்கம், புலி யானைகள் ,சிறுத்தை ,கரடி போன்ற வனவிலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு சாகசங்கள் நடத்தும். குதிரைகள், குரங்குகள், பறவைகள்  என்று மற்றொரு படையும்  உண்டு .விலங்குகள் கார் ஓட்டும் ,ஜீப் ஓட்டும் ,

சிங்கங்களை டிரில் மாஸ்டர், சாட்டையைச்  சுழற்றி அணிவகுத்து நிற்க வைப்பார். புலியை சின்ன ஸ்டுலில் நிற்க வைப்பார்   அதன் வாயில் தலையை விட்டு வெளியில்  எடுப்பார். கரடி சைக்கிள் ஓட்டும். குதிரைகள்  அற்புதமாக நடனமாடும்  பறவைகள் அணிவகுக்கும் . சின்ன சைக்கிளை ஓட்டும். யானைகள் சிறு பிள்ளைகளைப் போல பழக்கி வேடிக்கை காட்டுவார்கள்.ஒரே பைக்கில் இருபத்தைந்து பேர் தொங்கி கொண்டு போவார்கள் .

சர்க்கஸ் கலைஞர்களின் திறமை  மலைக்க வைக்கும் . இது  உடலா, வில்லா என்று வியக்குமாறு  பெண் கலைஞர்கள் கம்பி வளையங்களில் உடலை நுழைத்து  வித்தை காட்டுவார்கள். கம்பி மேல் நடப்பார்கள்.  ஆண் கலைஞர்கள் நெருப்பு வளையத்தில் நுழைந்து வெளியில் வருவார்கள் .உடலில் தீப்பந்தத்தைத் தேய்த்துக் கொள்வார்கள் . வாயில் இருந்து நெருப்பு வர வைப்பார்கள். ஒரு மெகா சைஸ்  இரும்பு கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் வீரர்  "சர் சர் என்று"  மோட்டார் பைக் ஓட்டும் நிகழ்ச்சியும் தவறாமல் நடக்கும்.

பார் விளையாட்டு கூடாரத்தின் உத்தரத்தில்  நடக்கும் விளையாட்டு. இரும்பு பார்களில் ஆண்களும்,பெண்களும் தொங்கிக் கொண்டும் , ஒரு மூலையில் இருந்து அடுத்த மூலைக்குப் பறந்து கொண்டும் நடத்தும் வீர விளையாட்டு . கரணம் தப்பினால் மரணம் போல இருக்கும்.பறக்கும் பாவை திரைப்படத்தில் எம்ஜியார் ,சரோஜாதேவி அந்த பார் விளையாட்டை ஆடுவதைக் காணலாம். குலமகள் ராதை படத்தில் "இரவுக்கு ஆயிரம் கண்கள் "பாடலிலும் இதைக் காட்டுவார்கள் . சர்க்கஸ் கலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப் பட்ட மற்றும் ஒரு வெற்றிப்படம் கமலின் "அபூர்வ சகோதரர்கள் ". பல திரைப்படங்களின் க்ளைமாக்ஸ் சர்க்கஸில் நடக்கும்.

சக கலைஞர்களுடன், மிருகங்களுடன் விதவிதமான சாகசங்களை நடத்துவார்கள்.வீர விளையாட்டுகள் செய்ய வசதியான  வண்ண வண்ண  குட்டை ஆடை,,  பிரகாசமான  விளக்கொளியில் ஔிரும் பளீர் மேக்கப்  உடன் ஷோ முழுவதும் குறையாத எனர்ஜியுடன் இருப்பார்கள் சர்க்கஸ் கலைஞர்கள் . அவர்கள் வயது ஏற ஏற ,உடலில் தெம்பு குறைய , ஓரங் கட்டப்படுவார்கள் .தவறி விழுந்து அடிபட்டால் அவர்கள் வாழ்வே அஸ்தமித்து விடும் 

சாகசங்களும், வீரதீர செயல்களும், வேடிக்கை வினோதங்களும் நிறைந்த சர்க்கஸ் ஒரு முழுமையான பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. குள்ள மனிதர்கள் கோமாளிகளாக உடை அணிந்து குழந்தைகளை மகிழ்ச்சியில்  ஆழ்த்துவார்கள். அந்த மகிழ்ச்சியை  பெரியவர்களும் வயது வேறுபாடு இன்றி அனுபவிப்பார்கள் .இசை வெள்ளமும் ,ஒளி வெள்ளமும் நிறைந்த  அந்த அரங்குகள் மனிதரும் ,மிருகமும் உயிரும் உடலுமாக ஒன்றிணைந்து நடத்திய சாகசங்களை உயிரோட்டத்துடன் நடத்திக் காட்டின.  

தொழிற்நுட்பம் வளராத அந்த காலத்தில்,    அந்த பெரிய அரங்கின்  கேலரியில் அமர்ந்து கண் இமைக்க மறந்து ,மெய் சிலிர்க்க  சர்க்கஸ் பார்த்த , சாகச நினைவுகளில் மூழ்கும் போது, மீண்டும் சிறுமியாகிறேன் நான் . 

எந்த ஊரிலாவது சர்க்கஸ் வந்தால் சொல்லுங்களேன் .

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...