Saturday, June 5, 2021

 தொலைந்த  அடையாளங்கள் 

மரியா சிவானந்தம் 


உங்களுக்கு  இவை நினைவிருக்கிறதா ?

மாடப்பிறையில் ஒளிர்விடும் அகல் விளக்கு .. சாணம் தெளித்து, அரிசி மாவில் கோலம் எழுதிய   இளம் பச்சை நிறத்தில் மினுங்கும் வாசல்.. செம்மண் தீட்டிய  மண் தரை.  புகை மண்டிய  சமையல்  கட்டின்   விறகடுப்பு..  சமைக்க   பரிமாற  மண்.  பித்தளை , செம்பு பாத்திரங்கள். முன் வாசல்   மர நிழலில்  கயிற்றுக் கட்டில் .முற்றத்தில் படரும்  முல்லை .  தோட்டத்தில் கன்றுடன் பசு.    

தமிழ் மண்ணின் வாழ்வியல் சார்ந்த இந்த அடையாளங்களில்   ஏதேனும் ஒன்றை நீங்கள் பார்த்த நினைவிருந்தால்  உங்கள் வயது  ஐம்பது ப்ளஸ்    என்று  பொருள் .

தமிழகத்தின் அடையாளங்கள் மாறிக் கொண்டே வருகிறது . கடந்த இருபது வருடங்களில்,  நம் இல்லம், உணவு. உடை,  வழிபாடு, திருமணம்  ,கொண்டாட்டங்கள்  எல்லாவற்றிலும்  ஒரு பெரிய மாறுதல் நிகழ்ந்துள்ளது .தமிழர் வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி , இப்போது ஒரு கலப்புக் கலாச்சாரத்தை நாம் கடை பிடிக்கிறோம். நம்  பழக்க வழக்கங்களில் வடநாட்டு கலாச்சாரமும் , மேற்கத்திய கலாச்சாரமும் புகுந்து விட்டதையும் ,அதை நாம் விரும்பி பின்பற்ற ஆரம்பித்து விட்டதையும்   நாம் இன்னும்  அறியாமலேயே இருக்கிறோம் .

சென்னையில் என் நாற்பதாண்டு கால  நண்பரின் மகன் திருமணத்துக்குச் சென்றேன் .அவர் என்னுடன் ஒன்றாக இலாகாவில் பயிற்சி எடுத்தவர். பின்னர் வெவ்வேறு இடங்களில் பணி செய்து, பதவி உயர்வுகள்  பெற்று இறுதியில் சென்னை அலுவலகத்தில்  இருந்தார் . திருமண வரவேற்பு  ஒரு ரிசார்ட்டில் நடந்தது . வரவேற்பில் மணமகன் குதிரையில் வந்து இறங்கினார் .மணமகன் உட்பட ஆண்கள் பளபளக்கும் ஷெர்வானியிலும் ,பெண்கள் லெஹன்கா, காக்ராவிலும்  நடமாடினார்கள் .  சேலை தவிர வேறு உடை அணிந்திராத நண்பரின் மனைவி ,சேலையை 'மார்வாரி 'ஸ்டைலில் உடுத்தி இருந்தார் .

 பஃபே உணவு அரங்கில் , இட்லியைத் தேடி உண்டோம். எல்லாமே பெயர் தெரியாத வட இந்திய உணவுகள் . பின்னணியில் ஷெனாய் இசை சாரலாக பொழிந்துக் கொண்டிருந்தது மணமகள் வட இந்தியப் பெண் . எனவே அதே ஸ்டைலில்  நடத்துவதாக  நண்பர் குறிப்பிட்டார். தமிழகத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்தின் இளைஞன் ஒருவன் உயர்வு பெற்று , ஒரு சிறப்பான திருமணத்தை, ஆர்ப்பாட்டமாக  நடத்தும் மகிழ்ச்சி அவர் முகத்தில் பளீரிட்டது. சாதிய கட்டுகளை உடைத்து  சமுதாயத்தில் சாதித்த பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது .  


 இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. திருமணம் மட்டுமல்ல, தமிழர் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் வந்து விட்டது. 'விருந்தோம்பல் தமிழரின் அடிப்படை பண்பாடு.   அம்மாக்களும், சித்திகளும் ,அத்தைகளும் சேர்ந்து ஐம்பது பேருக்கான உணவைத் தயாரிப்பதும் , விருந்தினரை விழுந்து ,விழுந்து உபசரிப்பதுமான காலம் போய் விட்டது .இருபது பேருக்கு என்றாலும்  சமைக்க நேரமும் ,பொறுமையும் இன்றி ,கேட்டரிங் சர்வீஸ் உதவியை அழைப்பது வாடிக்கையாகி விட்டது .இன்னும் குறைவான எண்ணிக்கை என்றால் ஸ்விக்கி  அல்லது ஸோமோட்டோ  இருக்கவே இருக்கிறது.


பள்ளி விடுமுறைக் காலங்களில்  பாட்டி வீட்டில் ,பெரியப்பா வீட்டில் குழந்தைகள் ஒன்றாக தங்கி ,ஒன்றாக விளையாடி  உண்டு , உறங்கி இருந்த  நினைவுகள் எழுகின்றன .   இப்போது உறவினர்  வீடு  செல்லும் போது  , அந்நியமாகவே உணருகிறோம்.  உரத்த குரலில்  தொலைக்காட்சி பேசிக் கொண்டிருக்க, விளம்பர  இடைவேளைகளில் உபசரிப்பும் ,உரையாடலும் நடக்கிறது. சட்டென்று   மனதில் ஒரு புழுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. சில மணித்துளிகளில் கை கூப்பி விடை பெறுகிறோம். .எப்போதேனும் விசேச  தினங்களில் சந்திக்கையில் ஒரு கையசைப்பில் அன்பை வெளிப்படுத்தி முடித்துக் கொள்கிறோம் . 

தமிழ் மண்ணின் வாசம் இன்று கிராமங்களில் கூட இல்லை.  ஜீன்சும் , சுடிதாரும், விரித்த கூந்தலும் , திலகம்  இல்லாத நெற்றியும் அங்கே பார்க்க முடிகிறது   நகர மயமாக்கல் , பொருளாதார வளர்ச்சி  தாராளமயமாக்கல் ,நுகர்வு கலாச்சாரம் இவை எல்லாமே முன்பு   வாழ்ந்த எளிமையான , இனிமையான வாழ்க்கையைப் பறித்து விட்டன . மிகக் குறைந்த தேவைகளைக் கொண்டிருந்த நம் பெற்றோரின் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் , வசதிகள் மிகுந்த வாழ்க்கை நமக்கு வாய்த்துள்ளது .அதில் நம் அடையாளங்களை நாம் அறியாமலே தொலைத்து விட்டோம் . . 

நம் கலாச்சார படிமங்கள் மேல் புகை படிந்துள்ளன . வருடம் ஒரு முறை வரும் சித்திரைத் திருநாளும் , தைத்திருநாளும் 'நாம்  தமிழர் ' என்று நமக்கு நினைவுபடுத்துகிறது . நம் வீட்டு ஆண்கள் அலமாரியில் மடித்து வைத்துள்ள வேட்டிகளை எடுத்து உடுத்திக் கொள்கிறார்கள் .இளம் பெண்கள் பாவாடை ,தாவணியில் செல்பி எடுத்து முகப்பு படமாக வைத்துக் கொள்கிறார்கள் .மறுநாளே அவர்கள்  மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டிய சூழல் வந்து விடுகிறது . 

தமிழர் பண்பாடும் , தமிழ் மொழி வளர்ச்சியும் இரு இணை கோடுகளாக  பயணிக்க வேண்டும் . ஆனால் தனியார் பள்ளிகளில்  தமிழைக் கற்பிக்கும் ஆசிரியைகள் ,ஆங்கிலத்திலேயே கற்பிக்கிறார்கள் . தமிழைத் தவறின்றி எழுத இவர்கள் கற்றுக்கொள்ள முனைவதில்லை. தமிழ் இலக்கியங்களின் சுவை பருக , இவர்கள் தயாரில்லை.  தமிழ் வளர்ந்த அறிஞர்களாம்  உ வே .சா  , கி.வ.ஜா,  மு.வ . திரு, வி.க ,  நா. பா, லா .ச .ரா  இவர்கள் எல்லோரும் யாரென்று இன்றைய  இளைஞரிடம்  கேட்டுப் பாருங்கள். கூகிள் தட்டி பார்ப்பார்கள்.   .பாரதியையும்  , பாரதிதாசனையும்   விரும்பி  படிப்பவர்களை      இத்தலைமுறையில்  விரல் விட்டு எண்ணி விடலாம்.

நம் வீர விளையாட்டுகள் காணாமல் போய் விட்டன . கும்மி ,கோலாட்டம் போன்ற பெண்களுக்கான ஆட்டங்கள் இல்லை . நமது நாட்டுப்புற கலைகள் நலிவடைந்து விட்டது .  நாட்டுப்புறக் கலைஞர்கள் வேறு தொழில் தெரியாமல் முடங்கி விட்டனர். தாலாட்டு பாடும் தாய்மார்களைக் காணவில்லை . தமிழ்க்கடவுள்கள் குடியிருந்த  நம் பூஜை அறைகளில் சாஸ்தாக்களும், சாய் பாபாக்களும் அமர்ந்திருக்கிறார்கள் .  நம் உணவில் தமிழ் இல்லை . உணர்வில் தமிழ் இல்லை , நம் பெயரிலும் தமிழ் இல்லை .


மாற்றம் ஒன்றே மாறாதது . கால ஓட்டத்தில் பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாது .  நமது உடைகள் மாறியதும் ,உணவு மாறியதும் 'கலாச்சார சீரழிவு ' என்று கூப்பாடு போடுவதும் எனக்கு உடன்பாடில்லை .வசதியானதை உடுத்திக் கொள்ளலாம்  வயிறு ஏற்பதை உண்ணலாம்.  ஆனால் இந்த மண்ணுக்குரிய பாரம்பரியத்தை, அழகியல் நிறைந்த வழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்ல  வேண்டும் . .

"மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை"  



 என்ற பாரதியின்  கூற்றுக்கு நான் மாறுபடுகிறேன் .   அவ்வபபோது  தமிழ்  மண்ணின் பெருமைகளை எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.  அது நம் இனிய கடமை .இந்த பண்டிகை தினங்களை  அதற்கான வாய்ப்பாக    நாம்  கருத வேண்டும் 

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

 சென்று வாருங்கள் விவேக் 

மரியா சிவானந்தம் 


இந்த காலை கண்ணீரை சுமந்து  விடிந்திருக்கிறது ..

நம்முடன் வாழ்ந்து , நம்மைச் சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்த  மக்கள் கலைஞன் விவேக்  மறைந்தார்  என்ற அதிர்ச்சி தரும் செய்தியை இன்று காலை கொண்டு  வந்துள்ளது .


 நம்ப முடியவில்லை .  

 இந்த   மண்ணை ,மக்களை ,சமுதாயத்தை நேசித்த ஒரு கலைஞர் விவேக்.  நகைச்சுவை வழியாக சமூக சீர்த்திருத்த கருத்துக்களைச் சொன்ன கலைவாணர் , எம்.ஆர்.ராதா வரிசையில் இன்னும் ஒரு நகைச்சுவை நடிகராக ,ரசிகர்களின் நெஞ்சில் அரியாசனம் போட்டு அமர்ந்தவர் .இவர் இன்று இல்லை என்ற எண்ணமே நம் கண்களில் நீரை வரவழைக்கிறது .


பாலச்சந்தரின் அறிமுகம் விவேக் .மனதில் உறுதி வேண்டும் , முதல் படம் . கதாநாயகி சுகாசினியின் தம்பிகளில் ஒருவராக நடித்து கவனம் பெற்றவர் .தொடர்ந்து அவர் நடித்த படங்களும் ,தாங்கிய வேடங்களும் நம் மனத்திரையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்துப் போகின்றன .அசால்ட் ஆறுமுகம் , கருத்து கந்தசாமி ,எமோஷனல் ஏகாம்பரம் ,பன்ச் பாலா ,தமிழ் கிறுக்கன் இவர்களை எல்லாம் நம்மால்  மறக்க முடியுமா ? 

1987 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக்கின் கலைப் பயணம் இன்று வரை தொடரந்துக் கொண்டிருந்தது . தொண்ணுறுகளில்  முழு வீச்சில் இருந்த இவரது கலைப்பணி  முப்பது ஆண்டுகளாக தொய்வின்றி இருந்தது . கதாநாயகனின் நண்பனாக வெளுத்து வாங்கிய விவேக் , கதாநாயகனையே கருணை இன்றி கலாய்த்து விடுவார் . இவர் ஏறத்தாழ எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் நண்பராக  திரையில் வாழ்ந்தவர் . சிவாஜி படத்தில் ரஜினியுடன் செய்யும் அலம்பல்கள் எங்கு நினைத்தாலும் ,என்று நினைத்தாலும் சிரிப்பு வரும் .


இவரது புகழை நிலை நாட்டிய படங்களின் பட்டியல் நீளம் .புதுப்புது அர்த்தங்கள் , காதல் மன்னன். பூமகள் ஊர்வலம் , ஏழையின் சிரிப்பில், அலைபாயுதே , பிரியமானவளே , மின்னலே , உள்ளம் கொள்ளை போகுதே , லேசா ,லேசா , தூள் , பேரழகன் , ஆயுதம் செய்வோம் , உத்தம புத்திரன் , வேலைக்காரன் என்ற படங்களில் இவர் கதாநாயகனையே விஞ்சும்  பாத்திரங்களில்    நடித்திருக்கிறார் . 

எதை சொல்வது ?எதை விடுவது ?

மிடில் க்ளாஸ் மாதவன் " மணிமாறன் ,' ஜமீன்தாராக வெட்டி பந்தா விடுவதிலாகட்டும் , ஏழையின் சிரிப்பில்  'கண்டக்டர்  அரசு' வாக அதகளம் செய்வதிலாகட்டும், பெண்ணின் மனத்தைத் தொட்டு படத்தில்   பின்பக்கம் புண்பட்ட கந்தசாமியாக சிரிக்க வைத்ததலாகட்டும் , எதிலும் குறை வைக்காத  பாத்திரங்களால் நம்மில் நிறைந்தவர் விவேக் .என் பெயர் பாலா ,வெள்ளைப்பூக்களை என்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் ..இரண்டுமே சிறப்பான வேடங்கள் .

நல்ல நடிகன் ,அதை விட நல்ல மனிதன் , சமூக பொறுப்புள்ள கலைஞன் .இயற்கை ஆர்வலர் , நல்ல கவிஞர், இசையில் ஆர்வம் கொண்டவர் என்று பலமுகங்கள் கொண்டவர்  விவேக். இவரது கவிதைகளை. பாலச்சந்தர் 'வானமே எல்லை 'படத்தில் பயன்படுத்திக் கொண்டார்    பத்மஸ்ரீ முதற்கொண்டு பல விருதுகள் இவர் மகுடத்தில் சிறகுகளாக அமைந்தன . அப்துல் கலாமின் கனவை நனவாக்க  ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் தொண்டைத் துவக்கி வைத்து தமிழகமெங்கும் அதற்கென பயணித்தவர் .அப்பணி முடியும் முன்னர் மரித்தது பெரும் சோகம் . 


ஊடகங்களில் நேர்க்காணலில்  விவேக்கின் சிரித்த முகமும், கற்பனைத் திறன் கொண்ட பேச்சும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும். அவர் ஓர் பிறவிக் கலைஞர்  . சிரிக்க சிரிக்க பேசி இன்று நம்மை அழ வைத்து செல்கிறார் .

தமிழ்த்திரை உலகம் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டது .நாம் நல்ல நண்பரை இழந்து விட்டோம் .இந்த மரணம் ஏற்படுத்தும் ரணத்தை எந்த களிம்பு கொண்டும் ஆற்ற முடியாது .

சென்று இளைப்பாறுங்கள்  விவேக் .,நீங்கள் விட்டுச் செல்லும் வெற்றிடம் நீண்ட காலத்துக்கு நிரப்பப்படாமலே இருக்கும் என்பதே நிதர்சனம் .

விகடகவி வாசகர்கள் சார்பாக   கண்ணீர் அஞ்சலிகள் 



நெஞ்சு பொறுக்குதில்லையே 

மரியா சிவானந்தம் 


சில ஆண்டுகளுக்கு முன் நான்  இலாகா பயிற்சிக்காக திருவனந்தபுரத்துக்குச்  சென்று சில வாரங்கள் தங்கி இருந்தேன். அப்போது ஏற்பட்ட அனுபவம் இன்னும் மனதை விட்டு மறையாமல் இருக்கிறது .


வழக்கம் போல்  அந்த பயிற்சி மையத்தின் முகப்பில் உள்ள  படிப்பறையில் அமர்ந்து நாங்கள் செய்தித்தாள்கள் மற்றும் வாரப்பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்போது காட்டன் சேலையில் , கம்பீரமாக வந்து ஒரு பெண் அமர்ந்து மலையாள செய்தித்தாள்களைப்  படிக்க தொடங்கினார் .பின்னர் மலையாள மொழியிலேயே  அங்கிருக்கும் பெண் அலுவலர்களிடம் உரையாடினார் .அவர்கள் பேசுவது முழுவதுமாக புரியா விட்டாலும் , அன்றைய அரசியல் நிலவரம் பற்றி பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரிந்தது . நான் அவரைக் கூர்மையாக கவனித்துக் கொண்டு இருந்தேன் .கொஞ்ச நேரத்தில் அவர் எழுந்து   கையில் பக்கெட்டும், துடைப்பமும்  எடுத்துக் கொண்டு கழிவறையைச்  சுத்தம் செய்து  தன் வேலையைத் தொடர்வதைக் கண்டேன் . 

முழுமையான கல்வி அறிவு பெற்ற ஒரு மாநிலத்தில் ,ஒரு துப்புரவு பணியாளர் படிப்பதையும் ஆர்வமுடன் அரசியல்  பேசுவதையும் காணும் போது மனதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது . கல்வி அறிவு தரும்  நிமிர்வும் ,நம்பிக்கையும் சுடர் விடும் அப்பெண்ணின் முகம்  இன்னும் என்  மனதில் இருக்கிறது.  கேரளா மட்டுமல்ல. தென் மாநிலங்களில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதும், பெண்கள்  மன ,உடல் நலத்துக்காக மாநில அரசுகள் பெரு  முயற்சி மேற் கொள்வதும்  நாம் காண முடிகிறது . அதனால் பெண்கள் எழுச்சி மலர்ந்திருப்பதை உணர முடிகிறது.  கல்வித்துறை ,மருத்துவம், சமூகநலத்துறை  போன்ற அரசின் துறைகள் நம் தமிழகத்தில் முழுமையாக செயல்பட்டு கிராமச்  சுகாதாரம் , கிராமப் பொருளாதாரம் மேம்பட பல செயல்திட்டங்களை வெற்றிகரமாக  நடத்தி வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம் . 


ஆனால் வடமாநிலங்களில் பெண்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியது .சமீபத்தில் செய்தித்தாள்களில் நாம் படித்த செய்தி ஒன்று நம்மைத் திடுக்கிட செய்தது .மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வேலைக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் தாம் செய்யும்  வேலைக்கு மாதவிடாய் இடையூறாக இருப்பதால் தங்கள் கருப்பையை அகற்றி விடுகிறார்கள் என்ற அச்செய்தி நமக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது. 

  

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பீட் (Beed) மாவட்டம் , மிகவும் பின்தங்கிய  வறட்சி மிக்க மாவட்டம் .  அங்கு கல்வி அறிவு அற்ற பெண்கள் ஏராளம். இவர்கள் கரும்புத்தோட்டங்களில் கூலி  வேலைக்குப் போகிறார்கள் .  அங்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு வலி இவர்களின் வேலைத்திறனைக் குறைப்பதாக இருப்பதாலும், பெண்கள் கழிவறைகள் இல்லாத காரணத்தாலும் , பெண்கள் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இப்பெண்களில் பலருக்கு  பதினைந்து அல்லது பதினாறு வயதிலேயே திருமணம் முடிந்து விடுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாய்மை அடைகிறார்கள் . இருபது வயதில் கருப்பையை அகற்றி விட்டு கரும்புத் தோட்டத்துக்கு  வேலைக்குச் சென்று விடுகிறார்கள் . மாதவிடாய் தொல்லைகளில் இருந்து விடுபட்ட உணர்வுடன் தங்கள் பணியைத் தொடர்கிறார்கள் 

உண்மையில் கருப்பை அகற்றபின் பெண்களின் உடல்நிலை ,மனநிலையில் ஏற்படும் மாறுதல்கள் , பின் விளைவுகள் பற்றிய அறிவு  இப்பெண்களுக்கு இல்லையா  அல்லது இச்செயலைச் செய்ய அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்களா என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது . கரும்புத்தோட்டங்களில் பெண்கள்  ஒப்பந்தக்காரர்கள் வழியாகவே  அமர்த்தப்படுகிறார்கள்  .   வருட ஊதிய ஒப்பந்தத்தில் கணவனும் , மனைவியும் ஒன்றாகவே வேலைக்கு  அமர்த்தப்படுகிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டு  மனைவி வேலைக்கு வராத போது  சம்பளத்தில் பிடித்தம் செய்வதுடன்,  அபராதமும் உண்டு. கருணை இல்லாத ஒப்பந்தக்காரர்கள்,பெண்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு வரவழைத்து கடுமையாக வேலை வாங்குவார்கள்   மாதவிடாய் தொல்லை கொண்ட   நடுத்தர வயது பெண்கள் மட்டுமல்ல ,இளம் பெண்களும் இதனால் கருப்பையை அகற்றி விட்டு உழைக்கச் செல்லும் கொடுமை அங்கு நடக்கிறது .

   பெண்களுக்கு ஏற்படும்  அதிகமான உதிரப்போக்கைக்   காரணம் காட்டி  புற்றுநோய்  பயத்தை ஏற்படுத்தி  கருப்பையை  அகற்றி விடும்  சம்பவங்களும் நடக்கின்றன . மருத்துவர்களும் இதற்கு துணை போகிறார்கள் என்பது மிகப்பெரிய வேதனை . உண்மையில் சாதாரண மருந்து ,மாத்திரை சிகிச்சையில் குணமாகக் கூடிய கருப்பை பிரச்சனைகளுக்கும் ,அறுவைச் சிகிச்சை செய்து பணம் பார்த்திருக்கிறார்கள் அந்த  மருத்துவர்கள்.  ஒப்பந்தக்காரர்கள் பெண்களுக்கு இந்த சிகிச்சைக்கு முன்பணம்  தருவதும், மருத்துவர்களுடன் உடன்பாடு செய்துக் கொண்டு கருப்பை அகற்றுவதையும் செய்தித்தாளில்  வெளி வந்துள்ளன

 ஐந்து  ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சினை ஊடகத்தில்  வெளியாகி புழுதியைக் கிளப்பியது  .பின்னர்  டாக்டர் நீலம் கார்கே தலைமையில் ஏழு பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு கள ஆய்வு  நிகழ்த்தியது. அந்த ஆய்வில்  பீட் மாவட்டத்தின் 82,309 பெண்கள் பரிசோதிக்கப்பட்டதில் 13,861 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பது உறுதியானது .இவர்களில் 35-40 வயது பெண்கள் மட்டுமல்ல 25  வயது பெண்களும் இருந்தது  வெளிச்சத்துக்கு வந்தது .டாக்டர் கார்கே 140 பக்கங்கள் கொண்ட தன் குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளார். 'குறைந்த வயது திருமணம், வறுமை, உடல்நிலைக் குறித்த போதிய அறிவின்மை , தண்ணீர்  பஞ்சம் , சுகாதாரமற்ற சூழல் , பணி இடங்களில் கழிப்பறைகள் இல்லாமை, மாதவிடாய் காலங்களில் வேலைக்குச் செல்லாத போது ஏற்படும் ஊதியக் குறைப்பு ' போன்ற குறைகளை அந்த குழு இந்த 'மாஸ் ஹிஸ்ட்ரெக்டமி 'க்கு காரணங்களாக எடுத்துக் கூறியது .

இப்போதும்  தொடரும் இந்த  அவல நிலை குறித்து  'இந்து பிசினஸ் லைன்'  இதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த வாரத்தில்  தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிராவின் தலமைச் செயலருக்கு  உடனடியாக  நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இது 'பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை' என்று கண்டித்துள்ளது. இந்த கிராமப்புற பெண்களின் வேதனை இனியும் தொடர முடியாது என்று ஆவேசமாக கண்டித்துள்ளது.  

இளம் வயதில் கருப்பை அகற்றப்பட்டால் ஏற்படும் பின் விளைவுகள் இப்பெண்களின்   உடல்   நலத்தை பெரிதும் பாதிக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் இவர்கள் போதிய ஓய்வு எடுக்க இவர்களின் சூழல் ஒத்துழைப்பதில்லை. ஒருநாளைக்கு 12 மணி நேரம் கரும்புத் தோட்டத்தில் இவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம். இவர்களை முன்னிறுத்தி வருட முதலில் பணம் வாங்கிக் கொள்ளும் இவர்களின் கணவர்களும் இப்பெண்களின் உடல்நிலையைப் பற்றி பெரிதாக  அலட்டிக் கொள்வதில்லை. மூட்டு வலி, கால்சியம் குறைபாடு, எலும்புகள் தேய்தல் என்று பல்வேறு தொந்தரவுகளுடன் , ஒரு  கரும்பு வெட்டும் இயந்திரமாக இப்பெண்கள் வாழ்கிறார்கள். கருப்பையுடன் ஓவரிகளையும் சேர்த்து அகற்றப்பட்டால்  ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள்  அவர்களின் மனநிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது . 


சமூக நலத்திட்டங்கள் நகர்ப்புறங்களை விட கிராமங்களுக்கு அதிகம் தேவையாக உள்ளன . இன்னும் கல்வியும், செழுமையும் எட்டிப் பார்க்காத  சிற்றூர்களில் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனம் தொடர்கிறது. வறுமைக்கு 'வாக்கப்பட்டு'ச்  செல்லும் இப்பெண்களின் துயர் நெடுங்கதையென தொடர்கிறது. அதன் விளைவு இந்த காலியான கருவறைகள் (Empty Wombs   ).  

பாரதியார் பிஜித்தீவின் கரும்புத்தோட்டங்களில் வாடும் இந்தியப் பெண்களைப் பற்றி எழுதிய பாடல் , இன்று பீட் மாவட்ட பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது .



பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், 
(அந்தக் கரும்புத்தோட்டத்திலே)


'ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்' என்பது பழமொழி .இந்த ஏழைப் பெண்களின் கண்ணீர் 'படை' கொண்டு  திரண்டு வரும் போது இந்த நிலப்பிரபுக்களின் சாம்ராஜ்ஜியங்கள் தவிடு பொடியாகும்.  

அந்நாள் விரைவில் வந்திடும் .








 


. 


-

 மகத்தான மனிதர் மயூர்  ஷெல்கே 

மரியா சிவானந்தம் 





இந்த வாரத்தில் ஒரு மனதை நெகிழ வைக்கும்  காணொலி  இணையத் தளங்களில் வைரலாகிக் கொண்டு  இருக்கிறது . இன்னும் உலகில் மரித்து விடாத மனித நேயத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்த காணொலி நம்மைப் பேச்சற்று,  செயலிழக்க வைக்கிறது. மும்பை ரயில்வேத்துறை ஊழியரான மயூர் ஷெல்கே .தன் உயிரையும் பொருட் படுத்தாது  இருப்புப் பாதையில் தவறி விழுந்து விட்ட ஒரு குழந்தையைக் காப்பாற்றிய  வீரச்செயல் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது , 


புல்லரிக்க வைக்கும் இந்த சம்பவம் ஏப்ரல் 17 ஆம் தேதி , சனிக்கிழமை மாலை 7 மணி அளவில்  நடந்தது. மும்பையின் புறநகர்ப்பகுதியான வாங்கனி ரயில் நிலையத்தில் அந்த பார்வை இழந்த தாய் தன் ஆறு வயது மகனைக் கையில் பிடித்துக் கொண்டு நடைமேடையில் நடந்துக் கொண்டிருக்கிறாள் . அப்பெண்ணுக்கு அந்த சிறுவனே கண்கள். . திடீர் என்று சிறுவன்  நிலைத் தடுமாறி தண்டவாளப்பகுதியில் விழுந்து விட்டான் .ரயில் வேகமாக வந்துக் கொண்டிருக்கிறது .பார்வையில்லாத அப்பெண்மணி கதறுகிறாள் .எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே தண்டாவாளத்தில் பாய்ந்து அச்சிறுவனைத் தூக்கி நடைமேடையில் போட்டு விட்டு தானும் மேலே ஏறி விடுகிறார் . ரயில் நடைமேடையைத் தாண்டிப் பறக்கிறது. ஒரு 3-4  நொடிப் பொழுதுகளில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது .

"தெய்வம் மனுஷ்ய ரூபணே" என்ற வாக்கை மயூர் நிரூபித்துள்ளார் ..மனிதன் இக்கட்டில் இருக்கும் போது கடவுள் மனித வடிவில் வந்து காப்பாற்றுவதை நம் அனுபவத்தில் பார்க்கிறோம். இந்த நிகழ்ச்சியும் நமக்கு அதே அனுபவத்தைத் தருகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் , இறைவன் நமக்குள் உறைகிறார் என்ற நம்பிக்கை கொள்கிறோம் . அந்த கணத்தில் மயூரின் உடலில் கடவுள் புகுந்து ஓர் அற்புதத்தை நிகழ்த்துவதைப்போல இருக்கிறது அக்காட்சி .

இன்று மயூர் ஷெல்கே  என்னும் பெயர் அனைவரும் அன்புடன் உச்சரிக்கும் ஒரு பெயராக, மரியாதைக்குரிய ஒரு பெயராக  மாறி  விட்டது ,தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பாய்ந்துச் சென்று ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும்  இந்த நிகழ்ச்சி ,திரைப்படங்களில் வரும் பல ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சி விட்டது .ரயில் நிலையத்தில் வைத்துள்ள சிசிடிவி கேமரா இதைத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. பார்க்கும் நாம் பதறிப் போகிறோம்.. 

"அந்த குழந்தையை நோக்கி நான் ஓடும் போது ,நானும் ஆபத்தை நோக்கி ஓடுவதை உணர்ந்துதான் ஓடினேன் .ஆனால் எப்படியும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது .(I ran towards the child but also thought that I might be in danger too... Still, I thought I should save him.) என்கிறார் மயூர் . அவரது நம்பிக்கை வீணாகவில்லை . குழந்தை கைப்பற்றப்பட்டது . ஒரு உயிரைக்காக்கும் பதட்டம் அந்த ஓட்டத்தில் தெரிகிறது . ஒரு மைக்ரோ செகன்ட் தாமதம் செய்திருந்தாலும் ,அவரும் குழந்தையும்என்னவாகி இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்யவே மனம் நடுங்குகிறது . It was a golden moment ! அந்த தருணத்தை எழுத்தில் வடிக்க முடியாது .

மயூர் இந்த நிகழ்ச்சி நடக்கும் 12 நாட்களுக்கு முன்புதான் ஒரு மகனுக்குத் தந்தையானார் . எனவே அவர் மனதில் தந்தைமை மேலோங்கி இருந்திருக்க வேண்டும் . "ஓவ்வொரு குழந்தையும் அவரவர் பெற்றவருக்கு மிகவும் விலைமதிப்பற்றது. எனவே நான் அதைக் காப்பாற்றும் முயற்சியில் இருந்து பின் வாங்கவில்லை" என்கிறார் மயூர் . ஒரு தந்தைக்குரிய துடிப்புடன் செயல்பட்டு, 'யாரோ பெற்ற குழந்தையை'க் காப்பாற்றி இருக்கிறார். ஒரு பார்வையற்ற தாயின் குழந்தையைக் காத்து, அவர்கள் வீட்டில் ஒளி ஏற்றி இருக்கிறார் .

மயூர் மத்திய ரயில்வேயில் பாய்ண்ட்ஸ்மேன் ஆக இருக்கிறார் . இந்த எளிய ரயில்வே ஊழியரின் மனிதநேயம் மிக்க செயல் அவருக்குப் பாராட்டைக் குவிக்கிறது . ரயில்வே ஊழியர்களும்,அலுவலர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள் . ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தனிப்பட்ட விதத்தில் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கிறார் .மயூரின் இந்த வீரம் மிக்க செயலுக்கு எந்த பரிசோ ,பணம் ஈடு செய்ய முடியாது .கடமை உணர்வும் பொறுப்பும் மிக்க இந்த செயலின் வழியாக மனித நேயத்தை முன்னிறுத்தி இருக்கிறார் 'என்று அவர் மயூரைப் பாராட்டி இருக்கிறார் .

எல்லா பாராட்டுகளையும்  மயூர் அமைதியுடன் ஏற்றுக் கொள்கிறார் .ரயில்வே துறை அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுப்பணம் அளித்து கௌரவித்துள்ளது .  ஜாவா  நிறுவனம் அவருக்கு ஒரு இரு சக்கர வாகனத்தைப் பரிசாக அளித்துள்ளது. எல்லா செய்தித்தாள்களிலும் அவரைப் பற்றி செய்திகள் வைத்துக் கொண்டு இருக்கின்றன . முகநூல் ,ட்விட்டர்களில் மக்கள் அவரிக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் . இந்த நிஜ ஹீரோவுக்கு   வீரதீரச் செயலுக்கான அரசின் விருதுகள்  தேடி வரும் நாளும்  தொலைவில் இல்லை .

 ஒரு பொதுத்துறை ஊழியரின் தன்னலமற்ற சேவை   மெய்  சிலிர்க்க வைக்கிறது. அரசுத்துறை ,பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைவரையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.  அரசின் பொதுத்துறை ஊழியரின் அர்ப்பணிப்பு மற்றுமோர் முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்துறைகளை, இத்தகைய ஊழியர்களைக்  காப்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறது. உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து அருள் செய்து வாழ்பவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்ச வேண்டிய தீவினைகள் ஏற்படுவதில்லை என்ற வள்ளுவரின் வாக்குக்கு மயூர் ஷெல்கே ஓர் உயிருள்ள எடுத்துக்காட்டு 

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை(குறள் 244 )


அந்த மகத்தான மனிதருக்கு நீண்ட ஆயுளும் ,நிறை செல்வங்களும் இறைவன் அருள வேண்டும் என்பதே தாயுள்ளங்களின் பிரார்த்தனை !.







 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...