அகிலம் போற்றும் அகிலன்
மரியா சிவானந்தம்
'காவியமா, நெஞ்சில் ஓவியமா ,
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா ? "
என்னும் பழைய பாடல் உங்களுக்கு நினைவிருக்கும். அறுபதுகளில் வெளி வந்த 'பாவை விளக்கு' திரைப்படம் நம் நினைவை விட்டு நீங்காத ஒரு படம் . அழகிய பாடல்களும் , புதிய கதை அமைப்பும் கொண்ட பாவை விளக்கை புதினமாக எழுதியவர் எழுத்தாளர் 'அகிலன் '.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு அகிலனைப் பற்றி அறிய வாய்ப்பில்லை. ஐம்பதுகளில் இருக்கும் முதிய தலைமுறையினர் கொண்டாடிய பெயர்களில் அகிலனின் பெயரும் ஒன்று. மு.வ, திரு.வி.க, தி.ஜா, கி.வா.ஜா, கல்கி, நா.பா, புதுமைப்பித்தன்.மௌனி, சுந்தர ராமசாமி, சாண்டில்யன், கு.ப.ரா போன்ற எழுத்தாளர்கள் கோலோச்சிய காலக் கட்டத்தில் தன் எளிய எழுத்துக்களால் தமிழ் வாசகரைக் கவர்ந்தவர் அகிலன் .
அகிலனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவரது நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வதில் 'விகடகவி' இதழ் பெருமை கொள்கிறது .
அகிலனின் முழுப் பெயர் பி.வி.அகிலாண்டம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெருங்களூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை , அகிலனின் சிறுவயதிலேயே மறைந்தார். இவரது அன்னை அமிர்தம்மாளின் அரவணைப்பில் வளர்ந்து படித்தவர் அகிலன்..ஒரு எழுத்தாளராக அகிலன் மிளிர அமிர்தம்மாளின் பங்களிப்பு முழுமையாக இருந்தது.
சுதந்திர போராட்ட காலத்தில், அதில் ஈடுபட்டு கல்லூரி படிப்பை பாதியில் விட்ட அகிலன், சுதந்திரத்துக்குப் ரயில்வே அஞ்சல் துறையில் பணியாற்றினார். பின்னர் வானொலி நிலையத்தில் சேர்ந்து எழுத்துப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நூற்றுக் கணக்கில் சிறுகதைகள், தொடர்கதைகள், பயணக்கட்டுரைகள் என தன் எழுத்தினை விரித்துக் கொண்டே போனார். ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர் போன்ற முன்னணி இதழ்கள் அவரது எழுத்துக்களை வெளியிட்டன.
அகிலனின் எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது. அதுவரை தமிழர்க்கு எட்டா கனியாக இருந்த ஞான பீட விருது ,முதல் முறையாக அவரது சித்திரப் பாவை நாவலுக்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது என்று அவரது வாயிற் கதவுகளைத் தட்டின . பாவை விளக்கு தவிர, 'கயல்விழி' என்னும் கதை 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' என்ற திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. மற்றொரு சரித்திர நாவலான 'வேங்கையின் மைந்தன்' சிவாஜி கணேசனால் நாடக வடிவம் பெற்று, வெற்றி பெற்றது. புதினங்கள் மட்டுமன்றி, சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், சிறுவர் நூல்கள் என்று அகிலன் ஓய்வின்றி எழுதினா.
அகிலம் போற்றும் எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை கொண்டாட, சாகித்ய அகாடமியும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து இந்த மாதம் 3-4 தேதிகளைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடுகளைச் செய்தன. இரண்டு நாட்களாக நடந்துக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களில் முதல் நாள் தொடக்க விழாவில் சாகித்ய அகாடமியின் பொறுப்பு அலுவலர் வரவேற்புரை நடத்த ,தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் திலகவதி, .சிற்பி .பாலசுப்ரமணியம்,பாரதிபாலன், அகிலனின் மகன் அகிலன் கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதைத் தொடர்ந்த கருத்தரங்கில் ,'அகிலனின் படைப்புலகம் ' குறித்த கருத்தரங்கு நடை பெற்றது. முதல் அமர்வில் "அகிலன் காட்டும் சமூகம்" என்னும் தலைப்பில் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் ,'அகிலன் படைப்புகளில் பெண்கள் 'என்ற தலைப்பில் எழுத்தாளர் உமா மோகனும் சிறப்புரை ஆற்றினார் . இரண்டாம் அமர்வின் போது அகிலனின் கட்டுரைகள், பயண இலக்கியங்கள், சிறுகதைகள் பற்றி தமிழ் இலக்கியவாதிகள் விவாதித்தனர்.
இரண்டாம் நாள் கருத்தரங்கில் அகிலனின் நாவல்கள் விவாதிக்கப்படுகின்றன. இரா. காமராசு, கலாப்ரியா, பழனி பாரதி, பிருந்தா சாரதி ஆகிய எழுத்தாளர்கள் புதினங்களை ஆராய்கிறார்கள். நிறைவு விழாவுடன் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகிறது.
முதல் அமர்வில், அகிலன் படைப்புகளில் பெண்கள் 'என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் உமா மோகன் அவர்களைத் தொடர்பு கொண்டு விழா நிகழ்வுகளைப் பற்றியும் ,பேச்சாளர்கள் ,பேசப்படும் பொருள், பார்வையாளர்கள் பற்றியும் கேட்டோம் .
எழுத்தாளர் உமா மோகன் புதுச்சேரி வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராக பணி புரிபவர் . கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார் .ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் இவர் படைப்புகள் வெளியாகி உள்ளது .சிறந்த பேச்சாளர்.
இனி உமா மோகனின் குரலில்,
'சாகித்ய அகாடமியும், லயோலா கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த இரண்டு நாள் விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சிறப்பு பேச்சாளர்கள் மட்டுமில்லாமல், தமிழகத்தின் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள் என பலர் பங்கு கொண்டுள்ளனர். தாயம்மாள் அறவாணன், கிருஷாங்கினி, வானொலி அண்ணா என்.சி. ஜெயப்ரகாசம் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்று கொண்டுள்ளனர் .சாகித்ய அகாடமியின் பொறுப்பாளர்கள் ,லயோலா கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்த்துறை மாணவர்கள் என்று அரங்கு நிரம்பி வழிகிறது. பேச்சாளர்கள் அகிலனைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள்"
மேலும் தொடர்ந்து ,
" அகிலனின் படைப்பில் சித்தரிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய உரையில் நான் என் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டேன். அவர் எழுதிய காலம் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலம் ,அன்றைய சமூகச் சூழலில், அடிமைத்தளையில் இருந்து பெண்கள் தம்மைத்தாமே விடுவித்து எழுச்சி பெற ஆரம்பித்த காலம்,
பால்ய விவாகம் ,பலதார மணம் , கல்வி மறுப்பு ,இளம் விதவைகள் என்று பெண்கள் ஒடுக்கப்பட்ட கொடுமை மிக்க சூழல் அது .இந்த நெருக்கடிகளில் இருந்து பெண்கள் தம்மை விடுவித்துக் கொண்டு கல்வி பெற்று, நெருப்பில் இருந்து புடம் போட்டவர்களாக உயிர்த்தெழுந்த பெண்களின் மனநிலையை தன் பாத்திர படைப்புகளின் வழியாக அகிலன் செவ்வனே பதிவு செய்துள்ளார் .
"பெண் 'புதினத்தில் வரும் பாத்திரங்களான கதை நாயகி வத்சலா ஆடம்பர பிரியை , பிடிவாதம் குணம் கொண்டவள் ,வத்சலாவின் தோழிகள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் ஸ்டெல்லா ,தேசத்தை நேசிக்கும் கவிஞனைக் கைப்பிடிக்கும் சுபத்திரா இவர்களைப் பற்றி பேசினேன் .
பின்னர் சிநேகிதி நாவலின் லலிதாவின் பாத்திரப்படைப்பு பற்றி பேசுகையில் , இளம் வயதில் தன்னை விட வயது முதிர்ந்தவரை மணக்க நேரிட்ட போதும் தன் உள்ள கிடக்கையை மறைத்துக் கொள்ளும் பாத்திரத்தின் நிலையைப் பற்றி பேசினேன் .
அவ்வாறே 'பொன்மலர் 'நாவலில் வரும் டாக்டர் சங்கரி , ராஜேஸ்வரி ஆகியோரின் பாத்திரப்படைப்பின் சிறப்பியல்புகளை பார்வையாளர் முன் வைத்தேன்" எஎன்று முடித்துக் கொண்டார் எழுத்தாளர் உமா மோகன்.
ஒரு முழுமையான உரையை அருகிருந்து கேட்ட உணர்வு வந்தது.
நன்றி உமா மேடம்
தமிழ் வளர்க்கும் எழுத்தாளர்கள் தலை முறை தோறும் பிறக்கிறார்கள். சென்ற தலைமுறையில் வசிக்கும் வழக்கம் கொண்டவரில் ,அகிலனைப் படிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவரது படைப்புகளை நாம் எடுத்துச் செல்ல ,இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவை நிலைத்து வாழும், தமிழும் தழைக்கும் .
No comments:
Post a Comment