விருந்தும் வேண்டாம் , விரதமும் வேண்டாம்
மரியா சிவானந்தம்
காலை முதல் இரவு வெகுநேரம் கழிந்த பின்பும் நமது கணினியில், மொபைலில் தகவல்கள் கொட்டிக் கொண்டே உள்ளன. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாட்சப், ரீல்ஸ், குறுஞ் செய்தி, குறும்படம் என்று எதாவது உருவத்தில் பல்வகையான தகவல்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. அவற்றுள் முக்கியமானவை உடல்நலம் , நோய்கள , மருத்துவம் பற்றிய செய்திகளே, மருத்துவம் சார்ந்த செய்திகளில் முன்னிலை வகுப்பது இதயநோய் , நீரிழிவு ,மூட்டு சம்பந்தமான நோய்களே .
இக்காரணத்தால், முன்பு எப்போதையும் விட இப்போது நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் . அதே போல எக்காலத்தையும் விட, இளம் வயதில் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இப்போது அதிகம். மருத்துவமணிக்குச் சென்றால் இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் பிரிவுகளில் சின்னச் சின்ன குழந்தைகள் பலர் சிகிச்சைக்காக காத்திருப்பதைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, இந்தியாவில், தமிழகத்தில் இளம் வயதில் நோய் வாய்ப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.
மாறி வரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள், நல்ல தூக்கம் மற்றும் சரியான உடற்பயிற்சி இல்லாமை இவற்றால் இளம் வயதில் வியாதிகள், குறிப்பாக நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் பெருகி வருகிறது. உடலுக்குள் ஒளிந்திருந்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ,உடல் உறுப்புகளைச் சிதைத்து மனிதனை மரணவாயிலில் நிறுத்தும் "வில்லத்தனம்" கொண்டது சர்க்கரை நோய். இது இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக இன்று மாறி நம்மை மிரள வைக்கிறது.
விகடகவிக்காக Dr.பூபதிராஜன் அவர்களைச் சந்தித்தோம் . நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அரசு மருத்துவராக பணி புரிபவர் நீரிழிவு நோய் பற்றிய பல தகவல்களை அவர் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் .
நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது ?
நீரிழிவு ஒரு நோய் என்று சொல்வதை விட ஒரு குறைபாடு என்றே சொல்லலாம். நம் உடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கிறது . நாம் உணவு சர்க்கரையாக மாற்றப்பட்ட பின்பு அதை ஆற்றலாக மாற்றுவது இன்சுலினின் வேலை.
இரண்டு விதமான சர்க்கரை நோய் உண்டு . Type 1 சர்க்கரை நோயில் கணையம் மரபணு குறைபாட்டால் , இன்சுலின் சுரப்பது நின்று விடும். இளம் வயதிலேயே இந்த வகை சர்க்கரை வியாதி தாக்கம் தெரியும் . இவர்கள் வாழ்நாள் முழுவதும் ஊசி மூலமாக இன்சுலின் எடுக்க வேண்டி இருக்கும் .Type 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் இன்சுலின் செயல்பாடு தடைபடும் (Insulin Resistance) .இவ்வாறு இன்சுலின் சுரப்பது தடைபடும் போது, உடலின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அப்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது .சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கா விட்டால், நாளடைவில் பல் வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் .இது வழக்கமாக நாற்பது வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு ஏற்படும் . மரபணு , வாழ்க்கை முறை, அதிக உடல் உழைப்பின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களால் சர்க்கரை வியாதி வருகிறது
நீரிழிவு நோயை எப்படி கண்டு பிடிப்பது ?
திடீர் உடல் எடைக் குறைவு, சோர்வு, அதிக தாகம் எடுத்தல், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் .இவ்வித அறிகுறிகள் இல்லாமலே அதிக சர்க்கரை அளவுடன் இருப்பவர்களும் உண்டு. இப்போது இளம் வயதிலேயே சர்க்கரை வியாதியுடன் இருப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் . நாற்பது வயதைக் கடந்தவர்கள் உடல் பரிசோதனையுடன் இரத்தத சர்க்கரை அளவையும் பரிசோதிக்க வேண்டும் ?
இந்த நோயைக் கண்டறிந்தவுடன் எப்படி நாம் என்ன செய்ய வேண்டும் .
வெறும் வயிற்றில் பரிசோதிக்கும் போது சர்க்கரை அளவு 70mg -100mg இருந்தால் அது சரியான அளவு .நூறுக்கு மேல் போனால் நீரிழிவுக்கு முன் நிலை (pre diabetic ) அப்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . உடற்பயிற்சி ,நடைப்பயிற்சி ,உணவுக் கட்டுப்பாடுகளை கடைப் பிடிக்க தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . மருந்து எடுக்க தொடங்கிய பிறகு , தொடர்ந்து மருந்தின் அளவை மாற்றாமல் இருக்க வேண்டாம் .மூன்று மாதத்துக்கு ஒருமுறை HbA1C டெஸ்ட் எடுக்க வேண்டும் .இது கடந்த மூன்று மாத சர்க்கரை அளவை நமக்கு காட்டும். இந்த அளவு வைத்து மருத்துவர் நாம் எடுக்கும் மாத்திரை அளவை நமக்கு தருவார். கணையத்தில் இன்சுலின் சுரப்பது அதிகமாக தடைபடும் போது இன்சுலின் ஊசி வடிவில் போட வேண்டிய அவசியமும் ஏற்படும்.
நமது உணவு முறையில் என்னென்ன மாற்றத்தை கொண்டுவர வேண்டும் .
மாவுச் சத்து குறைந்த low carb டயட்டை பின்பற்ற வேண்டும். புரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் .தென்னிந்தியாவில் அரிசி சாதமே நம் முக்கிய உணவாக இருக்கிறது . பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைத் தவிர்த்து கைக்குத்தல் அரிசியைப் பழகி கொள்ளலாம் . அரிசிக்கு பதிலாக சிறுதானியங்கள், கோதுமை சேர்த்துக் கொள்ளலாம் . அரிசியை விட இவற்றில் Glycaemic Index (சர்க்கரை அளவு குறியீடு ) குறைவு .பழங்களை சாறாக்கி குடிப்பதை விட பழமாகவே சாப்பிடுவது நல்லது. கஞ்சி வகைகளும் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக கூட்டும் என்பதால் தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள், முளை கட்டிய பயிறு, பிற பயிறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம் .
உங்கள் தட்டில் பாதியளவு காய்கறிகள், கால் அளவு புரோட்டின் மீதி கால் அளவு கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும். இதுவே நல்ல உணவு முறை. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம் .சரியான இடைவெளி விட்டு சாப்பிடலாம் . Neither fasting nor feasting என்று சொல்வது போல விரதமும் தவறு ,விருந்தும் தவறு .
முறையான உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி அத்துடன் உடல் உழைப்பும் இருந்தால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். இனிப்பு ,ஐஸ் கிரீம், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் புகைப்பிடித்தல் போன்ற வழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிட வேண்டியது மிகவும் அவசியம் .
சர்க்கரை நோயின் தாக்கங்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
"அதிக சர்க்கரை அளவு கண்கள், கால்கள், நரம்பு மண்டலம் , சிறுநீரகம் போன்றவற்றை பாதிக்கும். கண் விழித்திரை பாதிப்பு (Diabetic retinopathy) சரியான விதத்தில் சிகிச்சை எடுக்கவில்லை எனில் கண் பார்வையே போய் விடும் . சிறுநீரக பாதிப்பு (Diabetic nephropathy ) நரம்பு மண்டல பாதிப்புகளும் (Diabetic Neuropathy) சிறுநீரக பழுது. ஸ்ட்ரோக் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.கால் நரம்புகள் சரிவர செயல்படாது .காலில் புண் அல்லது காயம் ஏற்பட்டால் சீக்கிரத்தில் குணமாகாது . சீழ் பிடித்து, செப்டிக் ஆகும். விரல்களை மட்டுமல்ல, காலையே எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
சர்க்கரை அளவை சரியான கட்டுக்குள் வைத்திருப்பது ,மருத்துவ ஆலோசனை பெறுவது , உரிய மருந்துகளை தவறாமல் சாப்பிடுவது இவை எல்லாமே கட்டாயம் பின்பற்ற வேண்டும் . இல்லையேல், உடல் நலம் கெடுவதுடன் பல விளைவுகள் ஏற்படும் .
வரும் முன் காப்பது எல்லாவற்றுக்கும் மேலானது. இளைய தலைமுறையினர் நல்ல பழக்க வழக்கம், உணவு முறை ,உடற்பயிற்சி ஆகியவற்றை கடை பிடித்தால் சர்க்கரை நோய் மட்டும் அல்ல இதய நோய் போன்ற நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது .உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் பெற வேண்டும்" என்று முடித்துக் கொண்டார் .
நல்ல ஆலோசனைகள் கூறிய மருத்துவருக்கு நன்றி கூறி முடித்துக் கொண்டோம்
'What cannot be cured, must be endured " என்று சொல்வார்கள் . சர்க்கரை வியாதியை முழுவதும் குணப்படுத்த முடியாது என்றாலும் ,நல்ல பயிற்சி முறைகள் ,மருத்துவ உதவியுடன் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். கவலை இல்லாமல் வாழ முடியும் . இந்த சூட்சமத்தை நம் இளைய தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டும் .துவே இன்றைய தேவை .
வாக்கியம்
இலக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும்.