Thursday, July 27, 2023


தொட்டனைத்து ஊறும்  "மணற்கேணி"

மரியா சிவானந்தம் 


கல்வி  என்பது நமக்கெல்லாம்  கடவுள் தரும் வரம், 

கல்வியை நேசிப்பவருக்கு,  அது ஒரு தவம். 

 தமிழகத்தில் என்றுமே கல்விக்கு முதல் மரியாதைதான். .அரசுகள் மாறினாலும் , ஆட்சிகள் மாறினாலும் இங்கு கல்விக்குத் தரப்படும் கௌரவம், சிறப்பு, முக்கியத்துவம் வேறு மாநிலங்களில் இல்லை என்று நாம்  உறுதியாக சொல்லலாம்.  

எளிய மக்கள் இன்னும் அரசு மருத்துவமனைகளையும் ,அரசுப்பள்ளிகளையும் நம்பி வாழ்கிறார்கள். எனவே,  தமிழக அரசு மருத்துவத்துக்கும், கல்விக்கும் பட்ஜெட்டில் அதிக பட்ச தொகையை ஒதுக்கி வருகிறது  இவற்றில்   கல்வித்துறையே முதலாம் இடம் பிடிக்கிறது .இந்த நிதியாண்டில் ரூ.40,299 கோடி கல்விக்கான நிதியாக  ஒதுக்கி, அத்துறையை மேம்படுத்திட முனைந்துள்ளது.  அரசுப்  பள்ளிகளில் காலை உணவு   வழங்கப்படும் திட்டம்  மேலும் பல பள்ளிகளுக்கு விரிவாக்கப்பட்டதால், நம் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான  மாணவர்கள் மகிழ்ச்சியுடன்  தங்கள் பள்ளிப்  படிப்பைத் தொடர்கிறார்கள் .

தமிழக பள்ளி கல்வித்துறையின் (tnschoolsedu)  செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன.  இப்போது பள்ளி மாணவர்களின்  கற்றல் திறனை மேம்படுத்த,  புதிதாக  'மணற்கேணி 'என்ற புதிய செயலியை அத்துறை  அறிமுகப்படுத்தி  உள்ளது. இந்த செயலி காணொலி வழியாக மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கிறது.   தமிழ்நாடு பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த காணொளிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. 

கணினி  நமக்கு அறிமுகமான போது , வீடுகளில்  பிள்ளைகளின்  படிப்புக்காக , பொழுது போக்குக்காக கணினி நிறுவிய போது, இணையமும் , கூகுளும்  தேடு தளங்களும் இல்லாத காலத்தில் கல்வி சி.டிக்கள் வாங்கி பயன்படுத்தினோம்.   சில கம்பெனிகள்  அறிவியல்  பாடங்களை அனிமேசன் தொழிற்நுட்ப  உதவியுடன் வடிவமைத்து விற்றனர். அப்போது அந்த சி.டிக்கள் கொள்ளை விலை விற்றன. இந்த "மணற்கேணி" செயலி முற்றிலும் இலவசமாக எல்லா தரப்பு மாணவரும் பயன் பெறும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மீடியங்களுக்காக  தனித்தனியாக  தரப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதல் முதலாக காணொலி வடிவில் பாடங்களை அமைத்துள்ளது நமக்கு பெருமையைத் தரும்  செய்தி ஆகும். SCERT (State Council of Educational Research and Training) ஒத்துழைப்பில்,  அரசுத் துறையின் மென்பொறியாளர்கள் ,அனிமேட்டர்கள் உதவியுடன் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்பது மற்றும் ஒரு பெருமைக்குரிய செய்தி. 

கடந்த 25 ஆம் தேதி ,தாம்பரம் அடுத்த சேலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  கல்வி அமைச்சர்,  UNCCD துணைப் பொதுச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க, "மணற்கேணி"செயலி  வெளியிடப்பட்டது .6 ஆம்  முதல் 12 வகுப்பு வரை உள்ள பாடங்களை 27000  கருப்பொருளாக்கி 8000  காணொலிகள்  தயாரிக்கப் படுகிறது.  முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் வேதியியல் ,உயிரியல் , இயற்பியல் படங்களும்  6 முதல் 10 வகுப்பு வரை கணிதம் ,அறிவியல் பாடங்களும் (முதல் பருவம் வரை) தயாரிக்கப்பட்டு செயலியில் கிடைக்கிறது. இனி அனைத்துப் பாடங்களும் .அனைத்து வகுப்புகளுக்கும் உருவாக்கப்பட்டு, செயலியில் ஏற்றப்படும் .

இந்த செயலி பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. எளிய தமிழிலும் ,ஆங்கிலத்திலும் நல்ல அனிமேஷன் உடன் பாடங்கள் புரிந்துக் கொள்ளும்படியாக  இருக்கிறது .கணினி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்கும், இனிதாக்கும் முயற்சி இது.   ஆசிரியர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் . ஆர்வம் உள்ள பெற்றோர்களும் இந்த ஆப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம் பிள்ளைகளுக்கு வழி காட்டலாம் . 

தனியார் பள்ளிகள், நல்ல கட்டமைப்புடன் இயங்குவதால்  இந்த செயலியைப் பயன்படுத்த  முடியும். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் உள்ள பள்ளிகள், நல்ல கணினி, இணைய வசதி, திரை  போன்ற அமைப்புகள் இருப்பவர்கள்  நல்ல விதத்தில் இந்த செயலியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அரசின் கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை ஒளிபரப்புகையில் அதையும் மாணவர்கள் கண்டு, கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு காணொலியின் இறுதியிலும் அந்த பாடத்தை ஒட்டி  எழுப்பப்படும் வினாக்கள் அப்பாடத்தை மேலும் கருத்தூன்றி படிக்க உதவும் .

மணற்கேணி செயலி மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு கற்றலை இனிதாக்க , சுவாரஸ்யமாக்க  பெரு முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது .

"கற்றனைத்  தூறும்  அறிவு" என்று மணற்கேணியின் செயலியில் வள்ளுவர் வாக்கு பதிக்கப்பட்டுள்ளது. அவ்வாக்கு மாணவர் உள்ளத்திலும் பதிக்கப்படும். 

 மணற்கேணி நம் மாணவர் தம்  அறிவின் ஊற்றுக் கண்களைத் திறந்து விடும்  செயலியாக அமையட்டும் .

     

Thursday, July 13, 2023

 தங்க மங்கை ஐஸ்வர்யா 

மரியா சிவானந்தம் 


கல்வி, விளையாட்டு, அறிவியல், அரசியல் என்று எல்லா துறைகளிலும் புகுந்து  பெண்கள் சாதிப்பது இப்போது சாதாரண செய்தியாகி விட்டது. "ஆணுக்குப்  பெண் இங்கு இளைப்பில்லை காண் " என்று தினம் ஒரு செய்தியைப் படிக்கிறோம். ஆமாமாம்,  ஆண் என்ன? பெண் என்ன விடா முயற்சியும்,   கடின உழைப்பும் இருந்தால் யாராக இருந்தாலும், எந்த  சிகரத்தையும்  தொட்டு விடலாம் என்பதே இன்று பொதுக் கருத்தாகி விட்டது .  ஆயினும், சில பெண்களின் வெற்றிகளைக் காலம் பதிவு செய்து, வரலாற்றில் பொறித்து வைக்கிறது . 

அப்படி ஒரு சாதனையை நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச்  சார்ந்த ஐஸ்வர்யா நிகழ்த்தி இருக்கிறார் . நாம் அதிகம்  கேள்விப்படாத "மீன்வளம்' சார்ந்த B.F.Sc (Bachelor of Fisheries Science) படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல்வராக வந்தது மட்டுமின்றி 14 தங்கப் பதக்கங்களையும்  ஒருவராக வென்று இருக்கிறார். இந்த அபார சாதனைக்குப் பின் இருக்கும் ஐஸ்வர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது .ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு பதக்கங்கள் ஒருவரே பெற்று இருப்பது ஒரு மைல் கல் .  

சென்னையில் நடை பெற்ற டாக்டர் .ஜெயலலிதா மீன்வள  பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் இந்த தங்கப் பதக்கங்களை ஆளுநர் ஐஸ்வர்யாவுக்கு வழங்கினார் .மென்மேலும் பாராட்டுக்கள் ஐஸ்வர்யாவுக்கு  குவிந்துக் கொண்டு இருக்கிறது.  நம்பியார் நகர் மட்டும் அல்ல, நாகையே  பெருமையில் மிதக்கிறது. நாகை மட்டும் அல்ல,  பெண் பிள்ளைகளைப் பெற்ற வயிறுகள் பெருமை கொண்டு  பூரிக்கின்றன  . .

 .உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாம்  இடம் வகிக்கிறது. இந்திய அளவில் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 7ஆவது இடம் வகிக்கிறது. சுய தொழிலுக்கு வித்திடுவது மட்டும் அன்றி  நம் நாட்டில்  மீன்வளத்துறையில் வேலை வாய்ய்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க அசாத்திய நம்பிக்கை வேண்டும் .இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாய்  விளங்கும் ஐஸவர்யாவை, விகடகவிக்காக  நேர்க்காணல் செய்தோம்

இனி தங்க மங்கையுடன் ...

"வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா,  உங்களைப் பற்றி சொல்லுங்கள் "

" என் அப்பா பெயர் ஜெயபால் , அம்மா சுபா, அக்கா அபிநயா , அப்பா மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். என் அக்கா M.Sc (Life Sciences) படிக்கிறார். நான் ஐந்தாம் வகுப்பு வரை நாகை லிட்டில் பிளவர் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் மேனிலை வரை அரசு உதவி பெறும் நடராஜன் ,தமயந்தி மேனிலைப் பள்ளியிலும் படித்தேன்.இப்போது தூத்துக்குடியில் உள்ள மீன்வளக்கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துள்ளேன்"

" மிகப் பெரிய வெற்றியைச் சாதித்து இருக்கிறீர்கள் , முதலில் இருந்தே நன்றாக படிப்பீர்களா , ?"

பத்தாம் வகுப்பில் 495/500 , +2 வில் 1150/1200 எடுத்துள்ளேன் .படிப்பில் சிறுவயதில் இருந்தே ஆர்வமாக இருந்தேன். என் வீட்டிலும், பள்ளிகளிலும்  என்னை ஊக்குவித்துக் கொண்டு இருந்தனர் .

" +2 வில் நல்ல மதிப்பெண் இருக்கிறதே , ஏன் டாக்டர் ,என்ஜினியர் என்று சேரவில்லை? எப்படி மீன்வளத்துறை சார்ந்த ப்டிப்பைத் தேர்ந்து எடுத்தீர்கள் ?

"நீட் எழுதினேன்.ஆனால்  மருத்துவம் கிடைக்கவில்லை. பொறியியல், வேளாண்மை  எல்லாமே கிடைத்தது .என் அப்பா அடிக்கடி லைப்ரரி சென்று செய்தித்தாள் , புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கொண்டு இருந்தார் .அவர்தான் 'மீன்வளம் ' சார்ந்த படிப்பு  இருக்கிறது .அதைத் தேர்ந்தெடுக்க  சொன்னார். எனது +2 மார்க் அடிப்படையில்  கல்லூரியில் அட்மிசன் கிடைத்தது . நுழைவுத் தேர்வு என்று எதுவும் இல்லை. கவுன்சிலிங்  மட்டும் இருந்தது  . மீனவர் நல  வாரியத்தின் உபகார சம்பளம் கிடைத்தது.  என் மீனவ சமுதாயம் சார்ந்த படிப்பென்பதால் ஈடுபாட்டுடன் படித்தேன். இத்துறையில் சாதிக்கவும் ,சேவை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக நம்பினேன்.  கல்லூரியில் மிக ஆழமாக கற்பித்தனர். பேராசிரியர்கள் பெரிதும் ஊக்கம் தந்தனர் .எனக்கும் இந்த துறையில் P.hd  செய்து பேராசிரியர் ஆக வேண்டும் என்பதே விருப்பம் .

"எத்தனை ஆண்டு படிப்பு இது? இரவு பகலாக படித்திருப்பீர்கள் இல்லையா ?

"இளங்கலை நான்காண்டு படிப்பு,   செமஸ்டர் முறை தேர்வு மற்றும்  இன்டர்னல் மார்க் உண்டு , இரவெல்லாம் பிடித்தது இல்லை .வகுப்பில் மிக கவனமாக இருப்பேன். வகுப்பின் போது நோட்ஸ் எடுத்துக் கொள்வேன் . தினமும் அந்த பாடங்களை படித்து விடுவேன். தனியாக கூடுதல் நோட்ஸ் தயாரித்தும் படிப்பேன். படிப்பு தவிர ஸ்போர்ட்ஸில் ஆர்வம் உண்டு, பேஸ்கட் பால் விளையாடுவேன்"

"மிக்க மகிழ்ச்சி, நம் மாணவர்களுக்கு  சில வார்த்தைகள் சொல்லுங்களேன்" 

"படிப்பதை ஆர்வமுடன் படிக்க வேண்டும்.  அந்த ஆர்வமே உங்கள் வெற்றிக்கான வழிகளைக் கற்றுக் கொடுக்கும்" என்று முடித்துக் கொண்டார் .

மீண்டும் அவரை வாழ்த்தி,  விடை பெற்றுக் கொண்டோம் .

மீன்வளத்துறை படிப்புக்கு பல  நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மீன்வளத்துறையில் ஆய்வாளர், வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேர முடியும்.  தவிர வங்கிகளில் வேளாண் கடன் பிரிவு, இன்சூரன்ஸ் பிரிவுகளிலும் வேலைவாய்ப்பு இருக்கிறது. கல்லூரிகளில் பேராசிரியர், ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப வல்லுநராக பணியில் சேரலாம். 

அதிகம் பிரபலமாகாத இப்படிப்பை ஐஸ்வர்யா படித்து, தங்கங்களை  வென்று மாணவர்களின் கவனத்தை மீன்வளப் படிப்பை நோக்கி திருப்பி இருக்கிறார் .கடல் போல்  அகன்ற வாய்ப்புகள் நம் நாட்டில்  மீன்வளக் கல்விக்கு காத்திருக்கிறது. மாணவர்கள் இப்படிப்பை தயங்காமல் தேர்ந்தெடுத்து  வெற்றி பெற வேண்டும் . 

வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா, கனவுகளை வென்றெடுங்கள் !

Thursday, July 6, 2023

 ஓய்வறியா சிங்கங்கள் -II 

மரியா சிவானந்தம்  `


இறையன்பு ஐஏஎஸ்  பணி ஓய்வு பெற்ற அன்றே , பணி ஓய்வு பெற்றவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ். தமிழகத்தின் உயர் காவல் அதிகாரியான DGP அந்தஸ்தில் இருந்து சாதனைகள் செய்தவர். . வடக்கில் கிரண்பேடி, தெற்கில் வால்டர் தேவாரம், திலகவதி,  அலெக்ஸாண்டர், விஜயகுமார் போன்ற காவல் துறை உயர் அதிகாரிகள் தங்கள் செய்லபாடுகளால் மக்களிடையே நற்பெயரும், புகழும் அடைந்தவர்கள். அவர்களின் வரிசையில் சமீப காலங்களில் இடம் பெற்றவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்,

சைலேந்திர பாபு ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர் . இறையன்பு அவர்களைப் போலவே இவர் முதல் முதலாக பட்டம் பெற்றது வேளாண்மைத் துறையில் தான்.அதன் பின்னரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ,பாரதிதாசன் பல்கலைக்கழகம் ,சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டங்கள் பெற்றார் "காணாமல்  போன குழந்தைகள் " என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில்  குற்றவியல் துறையிலும் ஆய்வு நடத்தி முனைவர்  பட்டம் பெற்றார் .

1987 ஆம்  ஆண்டு ஐபிஸ் பணியில் சேர்ந்தவர் . காவல் துறைக்கு உரித்தான உறுதியான உடலும் , முறுக்கு மீசையும் , கம்பீரமான தோற்றம் கொண்டவர். எடுத்த காரியத்தைச் சாதிக்கும் மனத் திண்மையும் கொண்டவர். சேலம் ,தருமபுரி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏஎஸ்பி ஆக பணி புரிந்தார் .செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர் மாவட்டங்களில்  எஸ்பி ஆகவும், பின்னர் சென்னை ,விழுப்புரம் ஆகிய இடங்களில் காவல் துறை  இணை ஆணையராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணி ஆற்றியவர்.

 தமிழத்தின் கடலோரக்காவல் துறை ,ரயில்வே போலீஸ், சிறைத்துறை   போன்ற முக்கிய துறைகளில் கூடுதல் தலமைப் இயக்குனராக பணி புரிந்துள்ளார் . அப்போது  கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு குழுவைக் கட்டமைத்தார் .கோயம்பத்தூர் நகர ஆணையராக இருந்த போது காவல் துறையால் பள்ளிகளைத் தத்தெடுத்து கணினி மயமாக்கியது அவரது பெரிய சாதனை. 2021 முதல் சென்ற மாதம் ஓய்வு பெரும் வரை தமிழத்தின் டிஜிபி ஆக பதவி வகித்தார்.

சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக நிற்பவர்.  வீரப்பனை பிடிக்கும் படையில்  ஐஜி யாக  பணியாற்றியவர். சென்னை வெள்ளத்தின் போது சிறப்பாக செயல் புரிந்தார் . தமிழக டிஜிபியாக  பொறுப்பேற்ற பின்பு காவல் துறையினருக்கு பல நலத்திட்டங்களை  ஆணையிட்டார் .அவற்றுள் முக்கியமானது , மற்ற துறையில் இருப்பவர்களைப் போல காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது ( Weekly off ) ஆகும் 

சிறந்த எழுத்தாளர்,நல்ல பேச்சாளர் "நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம், உடலினை உறுதி செய், உனக்குள் ஒரு தலைவன் ,' சாதிக்க ஆசைப்படு"  போன்ற சுய முன்னேற்ற நூல்கள் அவர் எழுதிய  பத்துக்கும் மேற்பட்ட நூற்களில் சிறப்பு மிக்கவை. 'உடலினை  உறுதி செய், இலக்கினை  இறுதி செய்'  என்ற பொருளில் காணொலி வெளியிடுகிறார்  சைலேந்திர பாபு.  பிரதமர் விருது, குடியரசு தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளும், பதக்கங்களும் இவரது தோள்களை அலங்கரிக்கின்றன. 

 விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் . இந்திய தேசிய தடகள அணியின் மேலாளர் ஆக இருந்தார் .சைக்கிள் ஓட்டம் ,மாரத்தான், நீச்சல் ,துப்பாக்கி சுடுதல் என்று பல விளையாட்டுகளில் பரிசுகளை அள்ளியவர் .  

அவரது பணிக்காலத்தில் அரும்  பெரும் பணியாற்றயவர். அவரது  ஓய்வு தினத்தன்று பிரிவு உபச்சாரம் முடிந்த பின்பு  அவரையும் அவர் மனைவியையும்  அமர வைத்து  அவரது காரில்   வடம் கட்டி தேர் போல காவல் துறையினர் இழுத்துச் சென்றது அவரது காக்கைச்சட்டைக்கு கிடைத்த பெரும் கௌரவம். இறையன்பு போலவே  சைலேந்திர பாபு அவர்களும்  மாணவர்களை சந்தித்து,வழி நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

இந்திய  நாட்டின் முன்னேற்றத்துக்கும், அமைதிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும்   ஆட்சித் துறையும் காவல் துறையும்  செய்யும் அளப்பரிய சேவை நாம் அறிந்ததே. இவர்களைப் போலவே , மிக நேர்மையாக கடினமாக உழைக்கும்  ஏராளமான ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஊடகத்தின் வெளிச்ச ஒளி இவர்கள் மேல் படா விட்டாலும் சிறந்த சேவையைச் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்,  இந்த அதிகாரிகளின் வழி காட்டுதலில்,அரசின்  மேல் நிலை அதிகாரிகள் முதல்  கீழ் பலர்  கடைநிலை ஊழியர் வரை,  அர்ப்பணிப்புடன் அற்புதமாக  பணி செய்பவர்களின்  தியாகமும்,  சேவையும். எங்கும் பதிவு செய்யப்படவில்லை . அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டு, உழைத்துத் தேய்ந்தவர்கள் ஏராளம் . 

அனைவரையும்   வழி நடத்தி , உத்வேகம் தந்து  தான் தலைமை வகிக்கும் துறைக்கும் , நாட்டு மக்களுக்கும் நன்மை செய்து பணி ஓய்வு பெரும் ஓய்வறியா சிங்கங்கள் இருவரையும்   பாராட்டி  கை குலுக்கி   வாழ்த்துக்களைத் தெரிவித்துக் தெரிவிக்கிறது விகடகவி .

மக்கள் சார்பாக  அன்புடன் வரவேற்கிறோம் , சமூகப்பணி செய்ய வாருங்கள் .இனி உங்கள் களம் பெரிது . 





 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...