Friday, May 12, 2023

 அன்னையர் தினம் -முகங்கள் 

மரியா சிவானந்தம் 



உலகமே அன்னையர் தினத்தை  சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

அம்மா  உயிரும்  மெய்யும் ,உயிர் மெய்யும் கலந்த சொல். நமக்கு உயிரையும், உடலையும் தந்து பராமரித்து வளர்த்த கண் காணும் தெய்வம் அம்மா. அம்மா,அப்பாவை  விட  நெஞ்சுக்கு நெருக்கமான உறவு வேறில்லை. 

  இந்நாளில் பரிசுப் பொருட்களும், பூச்செண்டுகளும், ஆடை ஆபரணங்களையும் வழங்கி   பிள்ளைகள் தம் அம்மாவின் அன்புக்கு நன்றி கூறுகிறார்கள். தம் அன்னையின் அன்பை நினைவு கூர்ந்து உருகுகிறர்கள். அன்னையர் தினத்தில் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் தம் அன்னையை  போற்றுகிறார்கள்  . 

 நம் விகடகவி வாசகியர் சிலர் தம் தாயின் நினைவுகளை நம்முடன்  பகிர்ந்துக் கொள்கிறார்கள். அவர்கள் கூறுவதை கேட்கும் போது  முந்தைய தலைமுறை அன்னைகள் எப்படி கருணையுடன், அன்புடன் வாழ்ந்து முடித்தார்கள் என்பது புரிகிறது .தான் பெற்ற பிள்ளைகளை மட்டும் அன்றி , எல்லோரையும் நேசித்து, எல்லோருக்கும் உதவி செய்து ,எல்லோருக்கும் அன்பை வழக்கும் உயர்ந்த குணமும் ,விசாலமான மனதும் கொண்டவரே சென்ற தலைமுறை அம்மாக்கள் .

இனி வாசகியார் கூறுவதைக் கேட்போம்  

சாந்தி பேட்ரிக்    பேசுகிறார் 

"என் அம்மாவின் பெயர் சாந்தா  சூசைநாதன். மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்களின் மகள் வயிற்று பேரனின் மனைவி,  திருமணத்துக்குப் பின் கிறிஸ்துவ  மதம் பின்பற்றும் குடும்பத்தில் வாழ நேர்ந்தததால், தன்னை  அந்த புதிய சூழலுக்குத்  மாற்றிக் கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையே பிள்ளைகளை வளர்த்தார்கள்.   கடவுளுக்கும், மனிதருக்கும் அன்பானவராக ,உண்மையானவராக கடைசி வரை வாழ்ந்தார்கள்.  அம்மா ஒரு பரோபகாரி. யாரேனும் உணவு கேட்டு வந்தால், அடுப்பில் சாதம் வெந்துக் கொண்டிருந்தால், அவசர அவசரமாக வடித்து உணவு  கொடுத்தே அனுப்புவார்கள், தன்னால் இயன்ற உடல் உதவிகளை எப்போதும் செய்வார்கள். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களது விருந்தோம்பல்  குறைவு படாது .

யாராவது உடலநிலை சரியில்லை என்றால் இவர்கள் ஒன்பது வாரம் உபவாசம் இருந்து ஜெபம் செய்வார்கள் .அவர்கள் நலமானதும் நன்றியறிதலாக மேலும் உபவாச ஜெபம் செய்வார்கள். இறுதி வரை என்னுடனே இருந்து என் குழந்தைகளையும் அன்பாக வளர்த்தார்கள். அவர்களைப் பின்பற்றி நாங்கள் வாழ நினைக்கிறோம்.: என்றார் 


கலா கஜேந்திரன் அவர் அம்மாவைப் பற்றி  சொல்கிறார் 

"என் அம்மா இந்திராணி ஐந்து ஆண்கள், .ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றவர் .அம்மா பெரிதாக படிக்கவில்லை என்றாலும் ,எங்கள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தார்கள். என் அப்பா ஒரு டாக்டர். அதனால் அம்மாவை டாக்டரம்மா என்றே ஊரில் அழைப்பார்கள் . ஆனால் அம்மாவுக்கு எழுதவும்  படிக்கவும்  தெரியாது. என்னிடம் அம்மா  கையெழுத்து போட அந்த ஐந்து எழுத்துக்களைக் கற்றுக் கொண்டார்கள் ,

 படித்த அம்மா ,படிக்காத அம்மா என்று இல்லை .என் அம்மா ஒரு பல்கலைக் கழகத்துக்கு சமம் . நான்  பிரசவித்த  போது அவர்கள் அழுதது இன்னும் நினைவில்  இருக்கிறது . எனக்காக என் மாமியார் வீட்டில் தன் தள்ளாத வயதிலும் சேவை செய்தார், என் அம்மாவை  கடவுளுக்கும் மேலானவராக  நான் நினைக்கிறேன்" 

கிளாட்வின் தன்  அம்மா ஜூலியட் வாஸ் அவர்களை நினைவு கூறும் போது . " There is no substitute for mother’s love "என்று   தொடங்கி தொடர்ந்தார். "என் அம்மா மிக மிக எளிமையானவர், கடவுள் பக்தி நிறைந்தவர், எல்ல்லோரையும் அன்பு செய்தவர், விருந்தோம்பலில் அவருக்கு யாரும் இணை இல்லை .வீட்டுக்கு வரும் எலெக்ட்ரிசியன், பிளம்பர் என்று யார் என்றாலும் சாப்பாடு போடாமல் அனுப்ப மாட்டார்கள். சமையல் பாரம்பரிய முறையில் அம்மியில் அரைத்து செய்வார் .இறுதி வரை அம்மி , ஆட்டுக்கல் தான் உபயோகித்தார், கோவில்  காரியத்தில் பற்று கொண்டவர். புனித வாரத்தில் சொல்லப்படும் ஜெபங்களும் ,பாடல்களும் அத்துப்படி .எனவே  புனித வாரத்தில் என் அம்மாவின் நினைவு அதிகமாகி விடும் 

எத்தனை வசதியாக இருந்தாலும் உடுத்துவதும் ,அணியும் அணிகலன்களும் எளிமையாகவே இருக்கும்.  எனக்கு பார்த்து பார்த்து எல்லாமே வாங்குவர். சமூகத்தின் மேல் அச்சம்  கொண்டவர், யாரும் தன்னையோ குடும்பத்தவரையோ தவறாக பேசி விட கூடாது என்று சொல்வார். நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பினார் . எனக்கு அலுவலக வேலை பிடித்து இருந்தது. ஆனால் நான் தனியார் பள்ளியில் கற்பித்தது மட்டும் அன்றி ஜெர்மன், பிரென்ச் மொழிகளில் சிறந்து விளங்குகிறேன். அம்மாவின் அன்பும் ,ஆசியும் என்னை என்றும்    வழி நடத்தும் " என்றார் 

முகநூலில் பிரபலமான நான் ராஜா மகள் என்று அழைக்கப்படும் தேன்மொழி அண்ணாதுரை  தன் அம்மா கோதை நாயகி பற்றி  கூறுகிறார் :

"  யாராக இருந்தாலும் அவரவர்க்கு அவரவரைப் பெற்ற தாய் தெய்வத்திற்கு ஈடானவர்தான். அந்த வகையில் எங்களுடைய அம்மாவும் எங்களுக்கு தனித்தன்மை வாய்ந்தவர்தான். எங்கள் நால்வரையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கவும் வளர்க்கவும் அம்மாவுடைய பங்கு மிகவும் அதிகம். தமிழ்நாட்டு பாரம்பரிய பலகாரங்கள் சுவையாக செய்வதில் வல்லவர். அம்மாவுடைய தயாரிப்புகள் மேலைநாடுகளுக்கு விமானத்தில் பயணிக்கும்.  அம்மா எங்களை வளர்த்ததோடு தன்னிடம் பணியாற்றிய தொழிலாளர்களின் குழந்தைகளையும் படிக்க வைத்தார். 

வீடு தேடி வருபவர்கள் மட்டுமல்லாமல் சிறு வியாபாரிகளின் பசியாற்றுவார். அம்மாவுடைய இறுதிச்சடங்கில் இந்துக்கள் கிறிஸ்தவ. பாதிரியார்கள் இஸ்லாமிய பெரியவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தது ஒன்றே அம்மா வாழ்ந்த வாழ்க்கைக்குச் சான்று"என்று முடித்தார் .அம்மாவின் பெயரில் கோதை பதிப்பகம் நடத்துகிறார் தேன்மொழி 

இறுதியில் என் அம்மா திரேசம்மா . 82 வயதிலும் இன்றும் சோர்வும் ,களைப்பும் அறியாதவர் .இரண்டு ஆண்டுகளுக்கு பின் என் கணவர் இறந்த பின், நான் கேன்சரில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆனேன்.என் அம்மா இன்று வரை என் உடன் இருந்து என்னை அந்த நோயில் இருந்து மீள வைத்தவர். அவருடன் என் மகள், பேத்தி ,தங்கைகள் எனக்கு அம்மாவாக இருந்து என்னை மீட்டனர் , 

அம்மா நல்ல படிப்பாளி ,மணியன் ,சிவசங்கரி ,தமிழ்வாணன், பாலகுமாரன் போன்றவர்களின் வாசகி, சிறந்த மனிதாபிமானி. எப்போதும் எல்லோருக்கும் உதவி செய்ய தயங்காதவர் ,தெய்வபக்தி, உழைப்பு  இவை என்றும் அவரது கண்கள் .

அம்மாக்களைப் போற்றும் இந்நாளில் அவர்கள் அடிதொழுவோம் .

தாய் உள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் 





No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...