Thursday, December 21, 2023

மகத்தான மலைப்பொழிவு 

மரியா சிவானந்தம் 


மனித வாழ்வென்பது ஒரு  நதியின் பயணம் போன்றதல்ல. அது கடலில்  ஆடும் படகைப் போன்றது. சோதனை என்னும் சூறாவளியால்  அலைக்கழைப்படும்   இந்த உலக வாழ்க்கையில்  தோல்விகளும், துன்பங்களும் துரத்துவதும், நோயும், மரணமும் விரட்டுவதும், வறுமையும்  வாட்டமும்  நிறைந்திருப்பது வாடிக்கை .

ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் உற்ற துணையாகி ஊன்றுகோலாக நிற்பது நம் இறை நம்பிக்கை. குறிப்பாக  நமக்கு புத்துணர்ச்சியும், புதிய சக்தியும் தர வல்லவை புனித நூல்கள். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் எனப்படும் வேதாகமம்  பல வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. 

நம் வாழ்வின்  உந்துசக்தியாக  இருக்க நல்ல பல கருத்துக்கள் இந்நூல் முழுவதும் விரவி உள்ளன  வேதாகமம்  இரண்டு பெரிய நூல்களை உள்ளடக்கியது .பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்ற இரு புத்தகங்களும் எல்லாருக்கும் ஏற்ற நற்கருத்துக்களை கொண்டு இருக்கும் கருத்துக் கருவூலம். உலகம் படைக்கப்பட்ட விதத்தில் தொடங்கி இயேசு பிறப்புக்கு முற்பட்ட காலம் வரை நிகழ்ந்தவற்றைக் உரைப்பது பழைய ஏற்பாடு. இயேசு பிறந்த பின் நிகழ்ந்தவற்றை  தொகுப்பது  புதிய ஏற்பாடு. இரண்டு புத்தகங்களும்  மனித வாழ்வு மேம்பட, அவன் துன்பத்தில் ஆறுதல் தர, உறுதிப்படுத்த,  நல்வழிப்படுத்த  நல்ல பல கருத்துக்களை நமக்கு அளிக்கிறது.

எல்லா பகுதிகளும் வாழ்வியல் தத்துவங்களைச் சொன்னாலும், இயேசுவின் மலைப்  பிரசங்கம் அல்லது மலைப்பொழிவு  உள்ளார்ந்த கருத்துக்களை எல்லோருக்கும் சொல்வது பகுதியாகும் இயேசுவின்  அரிய சொற்பொழிவு அடங்கிய இப்பகுதியை  மகாத்மா காந்தி அதை மிகவும் விரும்பிப் படித்ததாக சொல்வார்கள். அந்நாட்களில் இயேசு செல்லும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளம் அவரைப் பின்தொடர்ந்து சென்றது .அவர் திருவாய் மலர்ந்துச் சொல்லும் வார்த்தைகளுக்காக ஆண்களும், பெண்களும் ,குழந்தைகளும் காத்துக் கிடந்தனர் ,

இன்றைய இஸ்ரேலில்  The Mount of beatitudes என்று இப்போது அழைக்கப்படும் மலை மேல் ஏறி ,அங்கு அமர்ந்துக் கொள்ள இந்த சிறப்பான மழைப்பொழிவை இயேசு நிகழ்த்தினார்  

விவிலியத்தின் முதல் நூலான மத்தேயு  நூலில்  இந்த மலைப்பிரசங்கம் அழகிய கவிதை போல ஆற்றொழுக்கான நடையில் சொல்லப்படுகிறது .

  

     இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் ஒருநாள் இல்லாமல் போகும், தூய்மையான உள்ளத்துடன் வாழும் போது ,நம்மால் இறைவனை தரிசிக்க முடியும் .நீதியை  நிலை நாட்ட போராடுவோர் மறுவுலகை பெறுவார்கள் . சாந்தமும் , கனிவும் குணமாக கொண்ட மக்கள் இவ்வுலகை தம் உரிமைச் சொத்தாக்கி கொள்வர் . 

இந்த மழைப்பொழிவில் மேலும் பல நல்ல கருத்துக்கள் உள்ளன .

"உலகுக்கு உப்பு நீங்கள் ,உப்பு சாரமற்று போனால் வேறு எதனால் சாரம் பெற முடியும் ? உலகுக்கு ஒளி நீங்கள் . உடலுக்கு கண்தான் விளக்கு .கண் தெளிவாக இருந்தால் முழு உடலும் பிரகாசமாக இருக்கும் .மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது .உங்கள் ஒளியை உலகத்தவர் முன் ஒளிர்ச்சி செய்யுங்கள் " இப்படி பல கருத்துக்களை மலைப்பிரசங்கம் உள்ளடக்கி இருப்பதால் , இது வேதாகமத்தின் மிக முக்கியமான ,சிறப்பான பகுதியாக இருக்கிறது .அன்பு ,கருணை , மன்னிப்பு , தன்னலம் இன்மை இவற்றை மறை பொருளாக  தன்னுள் வைத்துள்ளது 

 மனிதர் தரும் ஆறுதலை விட ,இறைவனின் சொற்கள் நமக்கு துன்பக் காலத்தில் பெரும்  ஆறுதலாக இருக்கிறது . உலக செல்வங்களின் மேல் பற்றைக் குறைத்து , மேன்மையான ஆன்மிக காரியங்களில் நம்மை ஈடுபட வைக்கிறது .  பொருள் பொதிந்த மலைப்பொழிவு பகுதி  ஒவ்வொரு கருத்தை அளிக்கிறது 


நம் அனைவரையும் பேறு பெற்றவர்களாக , ஆசி பெற்றவர்களாக மாற்றும் வல்லமை இந்த மகத்தான மலைப்பொழிவு பகுதிக்கு உண்டு. .

 

எளிய  மனத்தோர்  பேறுபெற்றோர்; 
      ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
சாந்த குணமுள்ளவர்  பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் பூமியை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதியின் பால்  வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; 
 ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
 ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; 
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

  


No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...